அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க நிதி ஒதுக்கப்படவில்லை என அரசாங்கம் பொய் கூறுகிறது - ஹர்ஷ டி சில்வா - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 29, 2024

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிக்க நிதி ஒதுக்கப்படவில்லை என அரசாங்கம் பொய் கூறுகிறது - ஹர்ஷ டி சில்வா

(எம்.மனோசித்ரா)

நிதி அமைச்சின் அறிக்கைக்கு அமையவே கடந்த அரசாங்கம் அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு தீர்மானித்தது. எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. நிதி ஒதுக்கப்படவில்லை என எதற்காக அரசாங்கம் பொய் கூறுகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வியெழுப்பினார்.

கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தலுக்கு முன் 6 மாதங்களுக்கொருமுறை சம்பளத்தை அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக அவர்கள் கூறினர்.

13 சதவீதம் தேசிய உற்பத்திக்கு சமாந்தர செலவு வரையறையின் கீழ் 3 நபர்கள் கையெழுத்திட்ட நிதி அமைச்சின் அறிக்கையையே கடந்த அமைச்சரவை சம்பள அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்துக்காக பயன்படுத்திக் கொண்டது.

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கூடாக கட்டம் கட்டமாக சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். எனவே திறைசேரியில் இதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை எனக் கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. 

எதற்காக நிதி ஒதுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகிறது? எனவே அரசாங்கம் மக்களிடம் கூறும் அனைத்தும் உண்மையா என்ற பிரச்சினையும் ஏற்படுகிறது.

இன்று சதொசவில் விற்பனை செய்வதற்கு அரிசி இல்லை. இதற்கு முன்னர் அரிசியை இறக்குமதி செய்யப்போவதில்லை என்று அரசாங்கம் குறிப்பிட்டிருந்தாலும், எதிர்வரும் நாட்களில் இந்தியாவிலிருந்து 50 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதாக அறிவித்தாலும் ஆர்ச்சரியப்படுவதற்கில்லை. அரிசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகின்ற போதிலும், அதனைத் தீர்ப்பதற்கான இயலுமை அரசாங்கத்துக்கு இல்லை.

எனவே மீண்டும் அரிசியை இறக்குமதி செய்யும் நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் அரிசி பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. 

தேர்தலுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்வதாகக் கூறினர். செய்ய முடியாதவற்றைக் கூற வேண்டாமென அன்றே நாம் எச்சரித்தோம். ஆனால் இன்று கூறிய எதையுமே செயற்படுத்த முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது என்றார்.

No comments:

Post a Comment