IMF இணக்கப்பாடுகளை பாதுகாத்துக் கொண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கம் பாரிய சவால் - செஹான் சேமசிங்க - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 22, 2024

IMF இணக்கப்பாடுகளை பாதுகாத்துக் கொண்டு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அரசாங்கம் பாரிய சவால் - செஹான் சேமசிங்க

(எம்.ஆர்.எம்.வசீம்)

சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை பாதுகாத்துக் கொண்டே அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது. இது இந்த அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். அவ்வாறு செயற்படாவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் ஆபத்து இருக்கிறது என முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் திங்கட்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், 2022ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மூலம் நிகழ்ந்த சமூக, அரசியல் நெருக்கடிக்கு ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் மிகமிவும் அர்ப்பணிப்புடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கை ஆரம்பித்தோம். அந்த நடவடிக்கை மிகவும் கஷ்டமானதாகும்.

செப்டெம்பர் 21ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் தோல்வியடைவதற்கு காரணமாக அமைந்ததும் வீழ்ச்சியடைந்திருந்த பொருளாதாரத்தை கட்டியெழுப்பி, பொருளாதார பரிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு மேற்கொண்ட மிகவும் கஷ்டமான தீர்மானங்களாகும்.

அரசியல்வாதிகள் யாரும் எடுக்க முடியாத, மக்களுக்கு கஷ்டமான தீர்மானங்களே எடுக்க வேண்டி ஏற்பட்டது. அதனால்தான் இன்று பொருளாதாரம் ஸ்திரநிலைக்கு வந்துள்ளது.

2021, 2022 காலப்பகுதியில் நாட்டின் அரச வருமான நூற்றுக்கு 8 வீத அளவிலேயே இருந்தது. என்றாலும் 2024ஆகும்போது நாட்டின் வருமானத்தை நூற்றுக்கு 13. 1 வீதமாக அதிகரித்துக்கொள்ள வேண்டி இருந்தது. எமது பொருளாதார திட்டமிடல் மூலம் அதனை அடைந்துகொள்வது எமக்கு பாரிய சவாலாக இருக்கவில்லை. அதேபோன்று பணவீக்கம் 2022 செப்டெம்பர் மாதம் நூற்றுக்கு 70 என்ற எல்லைக்கு நெருங்கி இருந்தது.

அந்நிய செலாவனி 20 மில்லியன் டொலர்வரை குறைவடைந்தது. ரூபாவின் பெறுமதி 367 ரூபாவுக்கு இருந்தது. அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலை இருந்தது. அதனால் நாட்டில் எரிபொருள், எரிவாயுக்கு வரிசை ஏற்பட்டது. 10மணி நேரம்வரை மின்சார துண்டிப்பு ஏற்பட்டது.அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு முடியாத நிலை ஏற்பட்டது.

இவ்வாறு 2022 முதல் சுருங்கி இருந்த பொருளாதாரத்தை 2023 இரண்டாம் காலாண்டில் இருந்து தொடர்ந்து படிப்படியாக வளர்ச்சியடையச் செய்து 2024ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டாகும்போது பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த முடியுமாகி இருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் மேடைகளில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என நாங்கள் நம்புகிறோம். வாக்குறுதிகளை நிறைவேற்றும்போது நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அதனை மேற்கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஏனெனில் சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு மற்றும் தனிப்பட்ட ரீதியில் எமக்கு கடன் வழங்கிய சர்வதேச நிறுவனங்களுடன் நாங்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை பாதுகாத்துக்கொண்டே இந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது.

இந்த வருடம் நாங்கள் எதிர்பார்க்கும் அரச வருமானம் நூற்றுக்கு 13.1 வீதமாகும். அடுத்த வருடமாகும்போது சாதாரண சேவைகளை முன்னெடுத்துச்சென்று, பலமான பொருளாதாரம் ஒன்றை ஏற்படுத்த அரச வருமானம் நூற்றுக்கு 15 வீதமாக அதிகரித்துக்கொள்ள வேண்டும்.

இதுதான் சர்வதேச நாணய தியத்துடனும் எமக்கு கடன் வழங்கியவர்களுடனும் நாங்கள் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடாகும். விசேடமாக கடன் மீள வழங்குவதற்கு முடியுமான தேவையான அந்நிய செலாவனி மற்றும் அரச வறுமானத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டி இருக்கிறது.

யார் அரசாங்கம் செய்தாலும் பொருளாதார நடவடிக்கைகளின்போது சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டை அடிப்படையாகக்கொண்டே மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தற்போதை அரசாங்கம் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது. அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற, அவர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாடுகளை பாதுகாத்துக்கொண்டே வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டி இருக்கிறது. இது இந்த அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பாரிய சவாலாகும். அவ்வாறு செயற்படாவிட்டால் நாடு மீண்டும் வீழ்ச்சியடையும் ஆபத்து இருக்கிறது.

நாங்கள் கொண்டு சென்ற பொருளாதார திட்டமிடல் நடவடிக்கை மூலம் நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வீழ்ச்சியடைய இடமிருக்கவில்லை. அதனால் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் முன்னெடுத்துச்சென்ற பொருளாதார திட்டமிடல் நடவடிக்கையை அவ்வாறே தொடர்ந்து கொண்டு செல்வது மிகவும் முக்கியமாகும்.

அதேநேரம் நாணய நிதியம் மற்றும் எமக்கு கடன் வழங்கிய தரப்பினருடன் ஏற்படுத்திக்கொண்டுள்ள இணக்கப்பாடுகளை அவ்வாறே முன்னெடுத்துச் செல்வதாக அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் சர்வதேசத்துக்கு உறுதியளித்திருக்கிறது. இது மிகவும் முக்கியமாகும் என்றார்.

No comments:

Post a Comment