உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு சில மதத் தலைவர்கள் முயற்சி - சாகர காரியவசம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 22, 2024

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த ஒரு சில மதத் தலைவர்கள் முயற்சி - சாகர காரியவசம்

(இராஜதுரை ஹஷான்)

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தின் பொறுப்பினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது சுமத்த ஒருசில மதத் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் முயற்சிக்கின்றன. நீதியரசர் (ஓய்வுநிலை) இமாம் தலைமையிலான விசாரணை குழு அறிக்கையையும் எதிர்பார்த்துள்ளோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தற்போதைய பிரதான பேசு பொருளாக காணப்படுகிறது . அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குண்டுத் தாக்குதல்களின் பொறுப்பினை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் மீது பொறுப்பாக்குவதற்கு ஒருசில மதத் தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தியது. ஆகவே அரசியலுக்காக குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்ள முடியாது.

குண்டுத் தாக்குதல்கள் குறித்து புலனாய்வு பிரிவு முன்னெச்சரிக்கை விடுத்திருந்த சந்தர்ப்பத்தில் அதனை கருத்திற் கொள்ளாது தேசிய பாதுகாப்பை அலட்சியப்படுத்திய பொலிஸ் மற்றும் குற்றப் புலனாய்வு பிரிவின் உயர் அதிகாரிகள் தற்போது பாதுகாப்பு தரப்பின் உயர் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் செனல் 4 தொலைக்காட்சி பொய்யான ஆவணப்படத்தை வெளியிட்டது. செனல் 4 யுத்த காலத்திலும் பொய்யான சித்தரிப்புக்களுடன் ஆவணப்படம் வெளியிட்டது.

ஆகவே இமாம் விசாரணை அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம். அல்விஸ் அறிக்கையை வெளியிட்ட உதய கம்மன்பிலவுக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தேசிய மக்கள் சக்தி இந்த குண்டுத் தாக்குதலை அரசியல் பிரச்சாரமாக்கியே ஆட்சிக்கு வந்தது. பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்ததால் கத்தோலிக்கர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்தார்கள். ஆகவே நம்பிக்கையளித்த மக்களுக்கு நியாயத்தை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

No comments:

Post a Comment