பலஸ்தீனம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இரண்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது : அஸாத் சாலி - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 23, 2024

பலஸ்தீனம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி இரண்டை நிலைப்பாட்டை பின்பற்றி வருகிறது : அஸாத் சாலி

(எம்.ஆர்.எம்.வசீம்)

இஸ்ரேலை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதன் மூலம் பலஸ்தீன் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளலாம் என புதிய ஜனநாயக முன்னணியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை (22) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளதை கண்டித்து 105 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டுக் கடிதத்தில் கையொப்பமிடுவதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதன் மூலம் பலஸ்தீன் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் இரட்டை நிலைப்பாட்டை தெரிந்துகொள்ளலாம்.

உலகளாவிய அரங்கில் பலதரப்பு சமாதானம் மற்றும் நீதியை ஆதரிப்பதில் நீண்ட மற்றும் பெருமையான வரலாற்றை இலங்கை கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கான நமது உறுதியான ஆதரவு உட்பட மோதலைத் தீர்ப்பதற்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை நிலைநிறுத்துவதற்கும் சர்வதேச முயற்சிகளுக்கு நமது நாடு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.

அத்துடன் பலஸ்தீனில் இஸ்ரேல் இராணுவத்தினர் முன்னெடுத்துவரும் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகள் சிறுவர்கள் மற்றும் சிவிலியன்களை இலக்குவைத்து மேற்கொண்டுவரும் தாக்குதல்களை கண்டித்து நாங்கள் போராட்டம் நடத்தும்போது, மக்கள் விடுதலை முன்னணியும் எங்களுடன் இணைந்து இஸ்ரேலுக்கு எதிராக செயற்பட்டுவந்தது. பலஸ்தீன் மக்களின் சுதந்திரத்துக்காக குரல் கொடுத்து வந்தார்கள்.

ஆனால் இஸ்ரேலை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபை கொண்டுவந்துள்ள தீர்மானத்தில் கைச்சாத்திட அரசாங்கம் மறுத்துள்ளது. அதிகாரத்துக்கு வருவதற்கு முன்னர் பலஸ்தீன மக்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பதாக தெரிவித்துவந்த மக்கள் விடுதலை முன்னணி, தற்போது அரச அதிகாரத்துக்கு வந்ததுடன் பலஸ்தீன் தொடர்பில் தங்களின் கொள்கையை மாற்றிக் கொண்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டை வேடத்தையே இது எடுத்துக்காட்டுகிறது.

மக்கள் விடுதலை முன்னணிக்கு நிலையான கொள்கை ஒன்று இல்லை என்பதை நாங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்திருக்கிறோம். பலஸ்தீன் தொடர்பில் தற்போது அது உறுதியாகி இருக்கிறது. எனவே அரசாங்கத்தை கொண்டுசெல்லும் இவர்களுக்கு உறுதியான கொள்கையும் இல்லை வேலைத்திட்டமும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment