ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 23, 2024

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை - இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்

(எம்.ஆர்.எம்.வசீம்)

பாராளுமன்றத்தில் எமக்கு பெரும்பான்மை பலத்தை மக்கள் வழங்கினால் சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு ஜனாதிபதிக்கு எந்தத் தடையும் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையகத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நமது நாட்டின் சம்பிரதாய அரசியல் நடத்தை மற்றும் அரசியல் முறைகளுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பையும், விரக்தியையும், அவநம்பிக்கையையும் கடந்த தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால், இன்னும் நமது அரசியல் தலைவர்கள் அதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

ஜனாதிபதி தேர்தல் முடிந்து இரண்டு, மூன்று நாட்களுக்குள் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில், இரண்டு, மூன்று நாட்களுக்குள் தேர்தலை அறிவித்து உடனடியக எழுந்த அலையை பாவித்து தந்திரோபாயமாக ஆதாயம் தேடும் முயற்சியை பார்க்கிறோம்.

2019 ஆம் ஆண்டிலும், இவ்வகையான அரசியல் நடத்தை மூலம் உருவாக்கப்பட்ட அலைகளுக்கு பலியாகியதால் ஏற்பட்ட விளைவுகளையும் பேரழிவுகளையும் நாங்கள் கண்டோம். மீண்டும் இதுபோன்ற அலைகளுக்கு இரையாகி அதன் விளைவுகளைச் சந்திக்க வேண்டுமா? அல்லது இத்தேர்தலில் இந்த பாரம்பரிய அரசியல் நடத்தையில் இருந்து மாறி புத்திசாலித்தனமாகவும் விமர்சன ரீதியாகவும் செயற்படுவதா என்பதை எமது மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

வரலாற்றின் படிப்பினைகளை கற்று, ஆட்சியில் அதிகாரங்களுக்கிடையிலான தடைகள் மற்றும் சமநிலையை உருவாக்கும் முடிவை எடுக்க வேண்டும்.

சம்பிரதாய அரசியல் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். நியமிக்கப்பட்ட ஜனாதிபதியும், நடைமுறை ரீதியான வேலைத்திட்டத்துடனும், ஆயத்தங்களுடனும் வெற்றிகரமான உலக நாடுகள் சென்ற வழியில் நாட்டை வழிப்படுத்தக்கூடிய அனுபவமும் திறமையும் வாய்ந்த குழுவைக் கொண்டமைந்த அதிகாரங்களுக்கிடையே தடைகள் மற்றும் சமநிலையை ஏற்படுத்தும் அரசாங்கத்தை அமைப்பது நாட்டுக்கு நல்லது.

ஐக்கிய மக்கள் சக்தி என்பது எம்மால் செய்ய முடியுமானதை சொல்லும், சொன்னதைச் செய்ய முடியுமான அரசியல் இயக்கமாகும். ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு உள்ளிட்ட உலக நாடுகளுடன் சிறந்த முறையில் தொடர்புகளை பேண முடியுமான அனுபவம் வாய்ந்த குழு எங்களிடம் உள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, வறுமை விகிதம் 25.9 வீதமாகும். உலக வங்கியின் 2023 அறிக்கையின்படி, எமது நாட்டில் 61.1வீத மக்கள் தங்கள் உணவு வேளையை குறைத்துள்ளனர் என சுட்டிக்காட்டுகிறது.

எமது நாட்டில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்கள் வறுமையில் விழும் அபாயத்தில் உள்ளனர். இந்த விபரங்கள் அனைத்தும் 2023 ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் வெளிப்படுத்தல்கள் ஆகும்.

ஆகவே இம்மக்கள் குறித்து முன்னுரிமை வழங்கி செயற்படுவது ஆட்சியாளர்களின் பொறுப்பாகும். சமூக நீதி மற்றும் வறுமை ஒழிப்பை இலக்காகக் கொண்ட சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி மக்களிடம் முன்வைத்துள்ளது.

எமது கொள்கைகளை ஏற்று, எமது அணியை ஏற்று, அதன் மூலம் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என நம்புகின்ற அனைவருக்கும் இரண்டு வேண்டுகோள்களை விடுக்கிறேன்.

முதலாவதாக, நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நேரகாலத்தோடு முன்னதாகவே சென்று வாக்களியுங்கள். ஜனாதிபதித் தேர்தலின் பின்னடைவைக் கண்டு தயங்காமல் வாக்கைப் பயன்படுத்துங்கள்.

இரண்டாவதாக, ஊடகங்களில் எமக்கான இடம் மட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், எம்மை நம்பி வாக்களிக்காத, எம்மை நம்பாத புதிய வாக்காளர்களுக்கு, மாற்று அரசியல் கட்சிகளை நம்பியுள்ள மக்களுக்கு, எந்தத் தரப்பினரையும் நம்பாமல் வாக்களிக்கச் செல்லாமல் இருப்போருக்கு, எங்கள் திட்டத்தை எடுத்துச் சொல்லி, அவர்களை நம்ப வைக்க இந்த சில நாட்களில் வேலை செய்ய வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தைக் கொண்ட பலம் பொருந்திய ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இந்த நாட்டில் அதிகாரங்களுக்கிடையே சமநிலை பேணும் அரசாங்கத்தை உருவாக்கி நாட்டை அபிவிருத்தியின்பால் இட்டுச்செல்ல உங்கள் பங்களிப்பை எமக்கு வழங்குங்கள்.

உலகம் இன்று மாறிவிட்டது. சீனா, வியட்நாம் மாறிவிட்டன. எனவே, சமூக ஜனநாயக வேலைத்திட்டத்தைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் தற்போதைய ஜனாதிபதி இணைந்து செயற்படுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றார்.

No comments:

Post a Comment