பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - ஊடகப் பிரதானிகளிடம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Wednesday, October 16, 2024

பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடாத்தி முடிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - ஊடகப் பிரதானிகளிடம் தேர்தல் ஆணைக்குழு வேண்டுகோள்

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத் தேர்லிலும் சகல வேட்பாளர்களுக்குமான சமவாய்ப்பை வழங்கி, அத்தேர்தலை நியாயமான முறையில் நடாத்தி முடிப்பதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சகல ஊடகங்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத் தாக்கல் என்பன கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வந்தது.

அதனையடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், சுயேட்சையாகவும் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்கள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் உள்ளடங்கலாக இந்த ஒட்டு மொத்த தேர்தல் செயன்முறையையும் சீரான முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு அவசியமான முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு கொழும்பிலுள்ள தேர்தல் ஆணைக்குழுவில் செவ்வாய்க்கிழமை (15) ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது தேர்தல்ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க வேண்டுகோள்விடுத்தார்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, ஆணைக்குழுவின் உறுப்பினர்களான எம்.ஏ.பி.சி.பெரேரா, அமீர் பாயிஸ், அனுசூயா சண்முகநாதன், பேராசிரியர் லக்ஷ்மன் திஸாநாயக்க மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற இச்சந்திப்பில் மும்மொழி மூல இலத்திரனியல் மற்றும் அச்சூடகங்களின் பிரதானிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஊடகங்களால் வழங்கப்பட்ட காலப்பகுதியின் நியாயபூர்வத்தன்மை, தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் ஊடகங்களும் அதனை உரியவாறு பின்பற்றி நடந்து கொண்டமை, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களை மக்களிடம் கொண்டுசென்று சேர்ப்பதில் ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்பு என்பவற்றை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, அக்காலப்பகுதியில் சில ஊடகங்களின் நியாயமற்ற நடத்தைகளைச் சுட்டிக்காட்டி, அவை மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடாத்திமுடிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், இத்தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் இயலுமானவரை சமத்துவமான பிரசார வாய்ப்பை அளிக்குமாறும் அவர் ஊடகப்பிரதானிகளிடம் கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment