வெளிநாட்டிலிருந்து கடன் பெற்றதாகவும், புதிதாக ஒரு பில்லியன் ரூபாய் பணம் அச்சிடப்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்தியை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் நிராகரித்துள்ளார்.
வழமையான செயற்பாடுகளுக்கப்பால் வெளிநாடுகளிடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ அரசாங்கம் கடன் எதுவும் பெறவில்லை என்று விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “புதிதாக எந்தவொரு நாட்டிலிருந்தும் நாங்கள் கடன் பெறவில்லை. திறைசேரி பத்திரங்கள் மற்றும் பிணைமுறிகள் காலாவதியாகும்போது புதிதாக பிணைமுறி வெளியிடுவது மத்திய வங்கியில் இடம்பெறும் வழமையான செயற்பாடாகும். அதற்கு அப்பால் புதிதாக வேறு எங்கிருந்தும் கடன் பெறவில்லை.
திறைசேரியும் இது தொடர்பில் விளக்கமளித்திருந்தது. பிணைமுறிகளுக்கான காலம் முடிவுறும்போது புதிய பிணைமுறி பத்திரங்கள் வெளியிடப்படும். இது ஒரு வட்டச் செயற்பாட்டை போன்று எதிர்காலத்திலும் இடம்பெறும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பணம் அச்சிடப்பட்டால் நிதியமைச்சராகப் பணியாற்றும் ஜனாதிபதி ஒவ்வொரு நாணயத்தாள்களிலும் கையெழுத்திட வேண்டும். ஆனால், இன்றுவரை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பம் கொண்ட நாணயத்தாள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றும், அப்படி ஒரு நாணயத்தாள் இருந்தால் அதை முன்வைக்கட்டும்” என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment