(இராஜதுரை ஹஷான்)
தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் நிச்சயம் வாக்களிக்க வேண்டும். வாக்களிப்பின் போது அலுவலக அடையாள அட்டைகளை உறுதிப்படுத்தலுக்காக சமர்ப்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பதற்கு இம்முறை 738,050 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். முதல் கட்ட வாக்களிப்பு இன்று (30) நடைபெறும்.
மாவட்டச் செயலகம், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிக்க முடியும்.
தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அரச உத்தியோகத்தர்கள் நவம்பர் மாதம் 1 மற்றும் 4 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.
தபால் மூல வாக்களிப்புக்கு ஒதுக்கப்பட்ட இந்த மூன்று தினங்களில் வாக்களிக்காதவர்கள் நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய திகதிகளில் வாக்களிக்க முடியும்.
தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி பெற்றுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் நிச்சயம் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பின்போது தேசிய அடையாள அட்டை, வெளிநாட்டு கடவுச்சீட்டு உட்பட அங்கிகரிக்கப்பட்ட ஆளடையாள அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டும்.
அலுவலக அடையாள அட்டைகளை உறுதிப்படுத்தலுக்காக சமர்ப்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு வாக்காளர்களிடம் வலியுறுத்துகிறோம்.
பொதுத் தேர்தலுக்கான ஆரம்பகட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் தற்போது விநியோகிக்கப்படுகின்றன.
எதிர்வரும் மாதம் 7 ஆம் திகதியுடன் வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகள் நிறைவடையும்.
தேர்தல் சட்டத்தை மீறும் செயற்பாடுகள் மற்றும் வன்முறைகள் தொடர்பில் அதிகளவில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
முறைப்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு உரிய நடவடிக்கைகள் பாதுகாப்பு தரப்பு ஊடாக முன்னெடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment