நாட்டின் சில பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மேல் மாகாணத்தில் சில பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு (Ministry of Education) இன்று (13.10.2024) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தின் கொலன்னாவ மற்றும் கடுவல வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகள், கம்பஹா மாவட்டத்தில் வத்தளை வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளுக்கு நாளை (14) விசேட விடுமுறை வழங்கப்படுவதாக மேல்மாகாண கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் தொடர்ந்து மோசமான வானிலை நிலவி வருவதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளை (14) பாடசாலைகளை திறப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க மேல் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 11 மாவட்டங்களில் 18,795 குடும்பங்களைச் சேர்ந்த 76,218 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளம், கடும் காற்று மற்றும் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
பலத்த மழை காரணமாக கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment