வெடிகுண்டு அச்சுறுத்தலால் முன்கூட்டியே கட்நாயக்காவில் தரையிறக்கப்பட்ட விமானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, October 24, 2024

வெடிகுண்டு அச்சுறுத்தலால் முன்கூட்டியே கட்நாயக்காவில் தரையிறக்கப்பட்ட விமானம்

(நா.தனுஜா)

மும்பையிலிருந்து கொழும்புக்கு வருகை தந்த பயணிகள் விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என வெளியான தகவல்களை அடுத்து, விமானம் முன்கூட்டியே தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (24) இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு கொழும்பில் பி.ப 3.15 மணிக்குத் தரையிறங்கவிருந்த விஸ்தாரா யு.கே 131 விமானத்தில் வெடிகுண்டு இருக்கலாம் என விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் தகவல்கள் வெளியானதையடுத்து பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தினால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 107 பயணிகள், ஒரு குழந்தை மற்றும் 8 விமானப் பணியாளர்களைக் கொண்டிருந்த மேற்குறிப்பிட்ட விமானம் பி.ப 2.55 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு, சகல பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இதன்போது விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) தனியார் லிமிடெட் உள்ளடங்கலாக பாதுகாப்புடன் தொடர்புடைய சகல கட்டமைப்புக்களாலும் இவ்வாறான சந்தர்ப்பங்களில் பின்பற்றப்பட வேண்டிய நியமங்கள் மற்றும் வழிகாட்டல்கள் பின்பற்றப்பட்டன.

இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகள் எவ்வித தடையுமின்றி மீண்டும் வழமை நிலைக்குத் திரும்பியுள்ளன.

No comments:

Post a Comment