முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமான, மிரிஹான, சுகோபோகி சாலாவ வீதியிலுள்ள மூன்று மாடி வீடொன்றின் கராஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பல கோடி ரூபா பெறுமதியான சொகுசு லெக்ஸஸ் காரை கைப்பற்றியுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாலாவ வீதியிலுள்ள வீடொன்றின் கராஜில் பதிவு இலக்கத் தகடு இல்லாத கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மிரிஹான தலைமையக பொலிஸ் விசேட அதிகாரிகள் குழு வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தியபோது வீட்டின் முன் கதவுகள் மூடப்பட்டன.
அந்த வீடு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் மனைவிக்கு சொந்தமானது என தெரியவந்ததையடுத்து, அயலவர்கள் அவரது கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை கண்டுபிடித்து தொடர்பு கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நுகேகொடை நீதவான் நீதிமன்றில் முறைப்பாடு அளித்ததை அடுத்து பிரதேச குற்றத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் கைரேகை பதிவுப் பிரிவின் அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
காரின் கதவுகள் திறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட காரின் இயந்திர எண் மற்றும் அடிச்சட்ட எண் ஆகியவற்றை கண்டுபிடிக்க அரசு ஆய்வாளர் வரவழைக்கப்படுவார் என மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment