2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை (G.C.E. A/L Exam) திட்டமிட்டபட்ட திகதிகளில் நடைபெறும் என்றும், பிற்போடப்படமாட்டாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று (30) பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்றபோது அவர் இதனை தெரிவித்தார்.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் 25ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உயர்தரப் பரீட்சை தொடர்பான அட்டவணையை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலிருந்து மாத்திரம் பதிவிறக்கம் செய்யுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு அறிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பரீட்சை நடைபெறும் திகதி தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், உயர்தரப் பரீட்சை தொடர்பில் சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பல தவறான விளம்பரங்கள் நடப்பதாகத் தோன்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளை மாத்திரம் எப்போதும் நம்புமாறும், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மாணவர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், உயர்தரப் பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகள் மிக விரைவில் பரீட்சார்த்திகளிடம் கையளிக்கப்படவுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பல மாணவர்களிடமிருந்து பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு தனக்கும் பல்வேறு நிறுவனங்களுக்கும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், 2025ஆம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment