25 கோடி ரூபா (ரூ. 250 மில்லியன்) பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் நேற்று (18) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய வர்த்தகரே கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சந்தேகநபரான வர்த்தகர் மலேசியாவிலிருந்து நேற்றையதினம் இரவு 11.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த பயணி, சுங்கத்திற்கு எதனையும் அறிவிக்காமல் வெளியேற்றக் கூடிய கிறீன் வாயில் ஊடாக வெளியேற முயற்சித்துள்ளதாக, சுங்கத் திணைக்கள மேலதிக பணிப்பாளர் நாயகமும், சுங்க ஊடகப் பேச்சாளருமான சீவலி அருக்கொட தெரிவித்தார்.
இதனையடுத்து, சந்தேக நபரான வர்த்தகர் (Green Channel) வழியாக விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது விமான நிலைய சுங்க அதிகாரிகளால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மலேசியன் எயபர்லைன்ஸுக்குச் சொந்தமான MH 179 விமானத்தில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்காவுக்கு வந்த குறித்த பயணியிடம் தேயிலைத் தூள் அடங்கிய பொதிகளில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ 179 கிராம் ஐஸ் வகை போதைப் பொருளை சுங்கப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment