மின்சாரம் தாக்கும் வகையில், அனுமதியற்ற வகையில் திட்டமிட்டு மின்சாரக் கம்பியை இணைத்து, நபர் ஒருவர் மரணமடையக் காரணமாக இருந்தவருக்கு காலி உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000ஆம் ஆண்டு (2000.02.06) காலி, இமதூவ, கொரட்டுஹேனகொட பகுதியில் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற நீண்ட கால வழக்கு விசாரணைக்கு அமைய நேற்றையதினம் (16) காலி உயர் நீதிமன்றம் இவ்வாறு தண்டனை வழங்கியுள்ளது.
பிரதிவாதி வேண்டுமென்றே சட்டவிரோத இணைப்பை ஏற்படுத்தியமை மூலம் மரணமொன்றிற்கு வழிவகுத்துள்ளமையை கண்டறிந்த நீதிமன்றம், இது திட்டமிட்ட செயலின் ஒரு அங்கம் என கருதியது.
பல வருடங்களாக இடம்பெற்ற வழக்கு விசாரணையில், குறித்த நபர் தெரிந்துகொண்டே சட்டவிரோத மின் இணைப்பை எடுத்ததன் மூலம் ஒருவரை கொலை செய்துள்ளதாக வாதத்தின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் அவருக்கு மரண தண்டனை வழங்கியுள்ளார்.
இமதூவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபருக்கே இவ்வாறு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரண தண்டனை, இன்னும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இலங்கையில் தொடர்ந்து விவாதத்திற்கு உட்பட்டு வரப்படுவதோடு, மனித உரிமை செயற்பாட்டாளர்கள் அதை ஒழிக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
ஆயினும், மிக மோசமான குற்றச் செயல்களாகக் கருதப்படும் வழக்குகளின் கடுமையான தண்டனையாக நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment