(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைகள் தேர்தல் திருத்தம் தொடர்பாக தமிழரசுக் கட்சி எம்.பி.யான சுமந்திரன் கொண்டுவந்துள்ள தனி நபர் பிரேரணை தொடர்பில் அறிந்து கொள்ளும் உரிமை சிங்கள மக்களுக்கும் உள்ளது என்று சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற அமர்வின்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கொண்டுவந்த தனி நபர் பிரேரணை இன்று 3ஆம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் எடுக்கப்படவிருந்த நிலையில் பாராளுமன்ற ஒழுங்குப்பத்திர நிகழ்ச்சி நிரலில் அது உள்ளடக்கப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி உரையாற்றிய எம்.ஏ. சுமந்திரன் ஜனாதிபதி கடும் இனவாதி என்று சாடினார். இதனை தொடர்ந்து எழுந்த சர்ச்சையின்போது சுமந்திரன் முன்வைத்த குற்றசச்சாட்டுத் தொடர்பில் தனது கருத்தை முன்வைத்தபோது சபை முதல்வர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது, நல்லாட்சி காலத்தில் மாகாண சபைகள் தேர்தல் சட்டத் திருத்த யோசனை காரணமாகவே தற்போது அந்தத் தேர்தலை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்களை தீர்த்துக் கொண்டு தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய வகையிலேயே தனி நபர் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு நாங்கள் இணங்குகின்றோம்.
இந்த தனி நபர் பிரேரணைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர்களில் எவராவது விவாதத்தை கோரினால் அந்த விவாதத்தை வழங்க வேண்டும். சிலர் இதற்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கின்றனர். இவ்வாறான பிரச்சினை இருப்பதனாலேயே இந்த விடயத்தில் எதிர்க்கட்சியினரின் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுமாறு கேட்கின்றோம். அவர்கள் எதிர்ப்பு இல்லை என்றால் எங்களுக்கும் பிரச்சினையில்லை.
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளது. அடுத்த பாராளுமன்ற அமர்வு ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி நடக்கவுள்ளது. அப்போது வேண்டுமென்றால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம். இந்த விடயத்தில் அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும். சிலர் இதனை எதிர்க்கலாம்.
பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் கூற்றைக் கேட்கும் போதுதான் ஜனாதிபதியுடன் என்ன இணக்கப்பாட்டை ஏற்படுத்தினார் என்பது தெரிகின்றது. இவர் தமிழ் மக்களுக்கு விளங்கும் வகையில் தமிழ் மொழியில் கூறியதை போன்று கெவிந்து குமாரதுங்க மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் கூறுவதை போன்று சிங்கள மக்களுக்கும் இது தொடர்பில் தெரிந்துகொள்ளும உரிமை உள்ளது என்றார்.
No comments:
Post a Comment