ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவிடம் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கைக்காக, தன்னால் முன்வைக்கப்பட்ட மலையக தமிழர் அபிலாஷை ஆவணத்தை ஐந்து திருத்தங்களுடன், தமிழ் முற்போக்கு கூட்டணி அரசியல் குழு ஏகமனதாக ஏற்றுக்கொண்டு உள்ளது என கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பில், மனோ கணேசன் எம்பி மேலும் கூறி உள்ளதாவது, சஜித் பிரேமதாச தலைமையில் அரசாங்கம் உருவாகின்ற போது, நிறைவேற்றப்பட வேண்டிய வேலைத்திட்டங்களில் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் அபிலாஷை கோரிக்கைகள் அடங்கிய ஆவணம், கொழும்பில் கூடிய கூட்டணி அரசியல் குழுவினால் தீவிரமாக ஆராயப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணம், மேலதிக சில விடயங்கள் சேர்க்கைகளாக சேர்க்கப்பட்டும், சில திருத்தங்களுடனும் அரசியல் குழுவாழ் ஏக மனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
கல்வி, தொழில் பயிற்சி, இளைஞர் முன்னேற்றம், சுகாதாரம், போஷாக்கு, வாழ்வாதார காணி, தொழில் வாய்ப்பு, வீடமைப்பு காணி, கொழும்பு உட்பட மாநகரங்களில் குடிபெயர்ந்து வாழ்வோருக்கு கல்வி-வீட்டு வசதி, அரச பொது நிர்வாக கட்டமைப்புக்குள் மலையகம், ஆட்சி உரிமையில் பங்கு ஆகிய தலைப்புகளின் கீழ் பல்வேறு விடயங்களை அடக்கிய ஆவணம், ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையாக கையெழுத்தாகும்.
No comments:
Post a Comment