பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை - பாலித ரங்கே பண்டார - News View

About Us

About Us

Breaking

Friday, August 30, 2024

பதவியிலிருந்து நீக்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை - பாலித ரங்கே பண்டார

(எம்.ஆர்.எம்.வசீம்)

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நான் விலகவும் இல்லை. என்னை நீக்கியதாக உத்தியோகபூர்வமாக எனக்கு அறிவிக்கப்படவும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டாரவை செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாகவும் அந்த பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய தலதா அத்துகோரளவை கட்சியின் செயலாளர் பதவிக்கு நியமிக்கப்பட இருப்பதாகவும் தேசிய பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் நேற்று செய்தி பிரசுரமாகி இருந்தது.

இந்நிலையில், நேற்று கட்சி தலைமையகமான சிறிகொத்தாவுக்கு விஜயம் செய்திருந்த பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, எந்தவிதமான முன் அறிவித்தலும் இல்லாமல், கட்சி தலைமையகத்தில் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்புக்கு வந்து இது தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

அவர் அங்கு தெரிவிக்கையில், என்னை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியுள்ளதாக ஒருசில தேசிய பத்திரிகைகளிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. நான் இன்னும் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்யவில்லை.

அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க என்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக உத்தியோகபூர்மான அறிவிப்பை இதுவரை எனக்கு அறிவிக்கவும் இல்லை.

என்றாலும் என்னை ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்காக விலைபோக இருப்பதாகவும் வேறு பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இருப்பதாகவும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனக்கெதிராக தெரிவிக்கப்படும் அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் விரைவில் பதிலளிக்க வேண்டும் என்பதால், எனக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் எதிர்வரும் ஒரு வாரத்துக்குள் முன்வைக்குமாறு தூய்மையான ஆண், பெண் இருபாலாரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

நானும் எனது குடும்பத்தினரும் தொடர்ச்சியாக அரசியல் பழிவாங்கல்களுக்கு இலக்காகி இருக்கின்றோம் என்பதை நினைவுபடுத்துவதுடன், எனது பிள்ளைகளை பழிவாங்கி, மிலேச்சத்தனமான செயலை செய்ய வேண்டாம் என பொறுப்பு வாய்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

நான் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகினாலும் அல்லது நீக்கப்பட்டாலும் நான் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்தவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

No comments:

Post a Comment