2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரை 39 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளதாகவும், அவர்கள் 39 பேரும் தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுயேட்சை வேட்பாளர் சரத்குமார குணரத்ன வேட்புமனு பத்திரத்தை சமர்ப்பிக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் அவர் தெரிவிக்கையில், வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. அனைவருக்கும் நன்றி. நீதியான முறையில் தேர்தலை நடத்த வேட்பாளர்கள் ஒத்துழையுங்கள்.
தாக்கல் செய்யப்பட்ட 39 வேட்பு மனுக்களில் 3 வேட்பு மனுக்கள் மீது முன்வைக்கப்பட்ட ஆட்சேபனைகள் மூன்றும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான மற்றும் வெறுப்பூட்டும் சித்தரிப்புக்களுடனான பிரச்சாரங்களை மேற்கொள்வதை சிவில் பிரஜைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வேட்பாளருக்கு மாத்திரம் விசேட சலுகை வழங்கும் ஊடகங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படும்.
வேட்பாளர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்திற் கொண்டு தேர்தல் பிரச்சாரங்களுக்கு பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என மேலும் தெரிவித்தார்.
இன்று (15) காலை 9.00 மணி முதல் முற்பகல் 11.00 மணிவரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
வேட்புமனுக்களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்காக 11.30 மணி வரை காலவகாசம் வழங்கப்பட்டது.
இதேவேளை, இன்றையதினம் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள் விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment