அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்கும் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்துவதற்கான யோசனைக்கே, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (13) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், இதன்படி, அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை ஆகக்குறைந்தது 24 வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளத்தை 55,000 ரூபா வரை அதிகரித்து, ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில், சீர்செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் விளக்கமளித்த அவர், அரச சேவையில் சம்பளம், வேதனங்கள் மற்றும் ஏனைய பணிக்கொடைகளை மீளாய்வு செய்து, அரச சேவையிலுள்ள அனைத்துப் பிரிவுகளிலும் சம்பளத்தை திருத்தம் செய்வதற்கான முன்மொழிவு 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
மேற்படி விதந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காக நிபுணத்துவக் குழுவொன்றை நியமிப்பதற்கு, மே 27 இல், நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் உதய செனவிரத்னவின் தலைமையில் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரச துறையின் பிரதான தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளது. அந்த விடயங்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டு அதன் பின்னர் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அறிக்கையில் விதந்துரைக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளுக்கு கொள்கை ரீதியாக அங்கீகாரம் வழங்குவதற்கும், குறித்த முன்மொழிவுகளை 2025 வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்கி, அமுல்படுத்துவதற்கும் ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, ஒட்டு மொத்த அரச சேவையிலுள்ள அனைத்துப் பதவிகளையும் நான்கு பிரதான மட்டங்களின் கீழ் வகைப்படுத்தி, ஒவ்வொரு மட்டத்துக்கும் இலங்கைத் தராதர வழிகாட்டல் (Sri Lanka Qualification Framework) மற்றும் தேசிய தொழில் நிபுணத்துவம் (National Vocational Qualification) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு உரிய தொழிலின் பணிப் பொறுப்புக்கள் மற்றும் விசேட தொழில்களுக்கான நிபுணத்துவத்துமுடைய ஊழியர்களை கவர்ந்திழுப்பதற்கும், தொழில்களைத் தக்கவைத்தலைக் கருத்திற்கொண்டு ஆட்சேர்ப்புத் தகைமைகளை வகைப்படுத்தவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆரம்பநிலை சேவைகளுக்கு ஆட்சேர்ப்புக்கான அடிப்படைத் தகைமைகளாக இலங்கை தராதர வழிகாட்டல், தேசிய தொழில் நிபுணத்துவத்தின் அடிப்படையில் சேவையின் தேவைகளுக்கேற்ப பொருத்தமான முறையமையைப் பின்பற்றுதல்.
ஏனைய அனைத்துச் சேவை பிரிவுகளுக்கும் முறைமைப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சை முறை மூலமாக மட்டும் ஆட்சேர்ப்புச் செய்தல் என்பன அந்த அமைச்சரவை தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, தகைமைக்கு ஏற்புடைய வகையில் தற்போதுள்ள அங்கீகரிக்கப்பட்ட ஆட்சேர்ப்பு ஒழுங்குவிதிகளை துரிதமாகத் திருத்தம் செய்தல் மற்றும் 2025 வருடத்தை அடிப்படை ஆண்டாகக் கருதி வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவுகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள பல்வேறு சீராக்கல்கள் மற்றும் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அனைத்துக் கொடுப்பனவுகளையும் ஒருங்கிணைத்து அனைத்து அரச ஊழியர்களுக்கும் (ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை திருத்தம் செய்யும் அடிப்படையில்) வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக மாதாந்தம் 25,000 ரூபாவை வழங்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் அரச சேவையின் ஆகக் குறைந்த ஆரம்ப மாதாந்தச் சம்பளத்தை, ஆகக் குறைந்தது 24 வீதத்தால் அதிகரித்து வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுடன் மொத்தச் சம்பளமாக ரூபா 55,000வரை அதிகரித்து ஏனைய அனைத்துப் பதவிகளுக்குமான அடிப்படைச் சம்பளத்தை அதற்கேற்புடைய வகையில் சீராக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரச வர்த்தகக் கம்பனிகள் வங்கிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இப்புதிய சம்பளம் மற்றும் கொடுப்பனவு முறையை நடைமுறைப்படுத்தல், 2030 ஆம் ஆண்டாகும்போது அரச சேவையில் ஒட்டுமொத்த பணியாளர்களை பத்து இலட்சமாகவோ அல்லது அதற்குக் குறைவான மட்டத்திற்கு மட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்தல் என்பவையும் யோசனையில் முன் வைக்கப்பட்டுள்ளன .
இதற்கமைய, 2025 மூன்று ஆண்டுகளுக்குள் ஒட்டுமொத்த அரச சேவையை இயன்றவளவுக்கு டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் தன்னியக்க முறை மூலமான இலத்திரனியல் கட்டமைப்பு ரீதியான அரச நிர்வாக முறைமையை அறிமுகப்படுத்தல் மற்றும் அதற்கான அரச முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்க ப்படவுள்ளன.
அரச துறையிலுள்ள ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியக்கார்களுக்கு ஆகக் குறைந்தது 1,000 ரூபா மாதாந்த பங்களிப்புடன், மிகக் கவர்ச்சிகரமான நன்மைகள் கிடைக்கக்கூடிய வகையில்,ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மருத்துவக் காப்புறுதி முறைமையை 2025 ஜனவரி தொடக்கம் நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இயன்றவரை வெளியகச் சேவைகள் போன்ற முறைமைகள் மூலம் அரச செலவுகளை குறைக்கும் வகையில் உயர் வினைத்திறனான வகையில் நியம முறைமைகளைப் பின்பற்றி சேவைகளைப் பெறுதல், இனங் காணப்பட்ட திணைக்களங்கள் , கூட்டுத்தாபனங்கள், நியதிச்சபை நிறுவனங்களை பங்குச் சந்தையில் அட்டவணைப்படுத்தப்பட்ட வரையறுக்கப்பட்ட பொதுக் கம்பனிகளாக மாற்றுவதற்கான மீள்கட்டமைப்பு செயற்திட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்த அரச துறை ஆளணியினர் மற்றும் சேவைகள் தொடர்பாக விஞ்ஞான ரீதியான ஆய்வை மேற்கொள்வதற்காக 2025 ஆண்டில் நடவடிக்கை எடுத்தல், அதற்கமைய அனைத்து அரச ஊழியர்களுக்கும் செயலாற்றுகை சுட்டிகளை தயாரித்து, அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை வழங்கல், 2020 ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றுள்ள அரச ஊழியர்களுக்கு உரித்தான சம்பள உயர்வை வழங்கி, அவர்களுடைய ஓய்வூதிய சம்பளத்தை திருத்தம் செய்து ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல்,
ஓய்வூதியக்காரர்களுக்கான வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவுகள், தற்போது சேவையிலுள்ள அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவில் 50 வீதத்திற்குச் சமமான வகையில் 2025 ஜனவரி மாதம் தொடக்கம் வழங்கவும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
தற்போது காணப்படும் வரிக் கொள்கையில் இச்செலவுகளை முகாமைத்துவப்படுத்தி, இச் சம்பள முறைமையை நடைமுறைப்படுத்தல் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள சம்பள முறைமையை 2025 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் அரச நிதி நிலைமைகளையும் கருத்தில் கொண்டு கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லோரன்ஸ் செல்வநாயகம்
No comments:
Post a Comment