நாட்டில் கடந்த 2023ஆம் ஆண்டில் 9,535 காச நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தேசிய காச நோய் மற்றும் இருதய நோய்கள் கட்டுப்பாட்டு நிகழ்ச்சி திட்டத்தின் (NPTCDD) விசேட வைத்திய நிபுணர் பிரமிதா சாந்தி லதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அதிகளவான காச நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 4,362 ஆகும்.
இந்நிலையில், மத்திய மாகாணத்திலிருந்து 986 காச நோயாளர்களும், ஊவா மாகாணத்திலிருந்து 407 காச நோயாளர்களும், தென் மாகாணத்திலிருந்து 844 காச நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்திலிருந்து 751 காச நோயாளர்களும், வடமேல் மாகாணத்திலிருந்து 717 காச நோயாளர்களும், கிழக்கு மாகாணத்திலிருந்து 576 காச நோயாளர்களும், வட மாகாணத்திலிருந்து 444 காச நோயாளர்களும், வட மத்திய மாகாணத்திலிருந்து 448 காச நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சளியுடன் கூடிய இருமல், நீண்ட நாள் காய்ச்சல், பசியின்மை, உடல் எடை குறைதல், இரத்தம் கலந்த சளி, மார்பு வலி என்பன காச நோய்க்குரிய அறிகுறிகளாகும்.
எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment