சுமார் 200 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு - பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Tuesday, August 27, 2024

சுமார் 200 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு - பந்துல குணவர்தன

(எம்.மனோசித்ரா)

அரசாங்கத்தின் மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சுமார் 200 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்க்கிழமை (27) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதி வசதிக்கு இணையாக அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் உலக வங்கி இலங்கையில் நீடித்த மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலுக்காக ஒத்துழைப்பு வழங்குகின்றது.

இவ்வேலைத்திட்டம் இரண்டு ஆண்டு வேலைத்திட்டமாக அமைவதுடன், அதன் முதலாம் கட்டம் 2023 ஆம் ஆண்டில் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் அரசின் மறுசீரமைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக சுமார் 200 மில்லியன் டொலர் நிதியை வழங்குவதற்கு உலக வங்கி உடன்பாடு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க, குறித்த நிதி வசதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய உலக வங்கிக் குழுமத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான இணை நிறுவனத்துடன் குறித்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என்றார்.

No comments:

Post a Comment