திருகோணமலை மூதூர் பகுதியில் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 04ஆம் திகதி நடந்த படுகொலைச் சம்பவத்தில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான அக்ஷன் பாம் (ACF) என்ற நிறுவனத்தில் பணியாற்றிய 17 தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் (04) 18 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
எனினும் தங்களுடைய உறவுகள் படுகொலை செய்யப்பட்டதற்கான நீதி 18 வருடங்களாகியும் இதுவரை கிடைக்கவில்லை என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவிகின்றனர்.
2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் 31ஆம் திகதியன்று வழமை போல் கடமையின் நிமித்தம் மூதூரில் உள்ள அலுவலகத்துக்குச் சென்றிருந்த பணியாளர்கள், மூதூர் பகுதியில் நிலவிய யுத்த சூழ்நிலையின் காரணமாக அலுவலகத்தை விட்டு வெளியேற முடியாத நிலையில் அங்கேயே தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து 2006 ஓகஸ்ட் 04ஆம் திகதி இந்த படுகொலைச் சம்பவம் இடம்பெற்றது.
குறித்த படுகொலைச் சம்பவத்தில் 4 பெண்கள் உட்பட 17 உள்ளுர் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தார்கள்.
இப்படுகொலையில் முத்துலிங்கம் நர்மதன், சக்திவேல் கோணேஸ்வரன், ரிச்சட் அருள்ராஜ் சிங்கராஜா பிறீமஸ், ஏ.எல். மொஹமட் ஜௌபர், ஆனந்தராஜா மோகனதாஸ் ரவிச்சந்திரன், ரிஷிகேசன், கனகரத்தினம் கோவர்த்தனி, கணேஷ் கவிதா, செல்லையா கணேஷ் சிவப்பிரகாசம் ரொமிலா, வயிரமுத்து கோகிலவதனி, அம்பிகாவதி ஜெயசீலன், கணேஷ் ஸ்ரீதரன், துரைராஜா கேதீஸ்வரன், யோகராஜா கோடீஸ்வரன், முரளீதரன் தர்மரட்ணம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டார்கள்.
மூதூர் பொது வைத்தியசாலைக்கு அருகில் இயங்கிவந்த அக்ஷன் பாம் எனும் சர்வதேச தொண்டர் நிறுவனத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த மேற்படி 17 பணியாளர்களையும் சீருடையில் வந்த ஆயுதம் தரித்த நபர்கள் நிலத்தில் குப்புறப்படுக்கச் செய்து பின்பக்கமாக தலையில் சுட்டு படுகொலை செய்ததாக அன்றைய செய்திகள் தெரிவித்தன.
No comments:
Post a Comment