ஐக்கிய நாடுகள் கல்வியியல், விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் (UNESCO) பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (16) இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவருடன் மேலும் மூவர் வருகை தந்துள்ளதுடன் அவர்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றுள்ளனர்.
குறித்த பிரதிநிதிகள் இன்று (16) அதிகாலை 2.10 மணியளவில் தோகாவிலிருந்து கட்டார் ஏர்வேஸ் விமானமான KR-662 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் அறையை வந்தடைந்தனர்.
இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்துள்ள UNESCO அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசோலே எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார்.
இதன்போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, வெளிநாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோரைச் சந்தித்து இலங்கைக்கான ஒத்துழைப்புக்களை மேலும் விரிவுபடுத்துதல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளார்.
அதேவேளை இலங்கை UNESCO அமைப்பில் இணைந்து 75 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளமையை முன்னிட்டு கொழும்பிலுள்ள நெலும் பொக்குனவில் நடைபெறவிருக்கும் நிகழ்விலும் அவர் பங்கேற்பவுள்ளார்.
அதுமாத்திரமன்றி UNESCO அமைப்பினால் உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள இடங்களுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
No comments:
Post a Comment