புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு புத்தளம் மேலதிக மாவட்ட நீதிபதியும் நீதிவானுமான அயோனா விமலரத்ன இன்று (09) பிடியாணை பிறப்பித்துள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருஞ்சாம்பிட்டிய பகுதியில் உள்ள அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடமொன்றிற்குள் அத்துமீறி நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு இன்று (09) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னரும் அலி சப்ரி ரஹீம் இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்துள்ளதுடன் அவர் சார்பில் சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அரச சார்பற்ற நிறுவனமொன்றுக்கு சொந்தமான கட்டிடத்திற்குள் நுழைந்து சொத்துக்களை சேதப்படுத்தியதாக பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கற்பிட்டி பொலிஸாரினால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வருடம் அறிவிக்கப்படாத தங்கம் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை வெளிநாடொன்றிலிருந்து கொண்டுவந்த குற்றச்சாட்டில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அபராதம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment