தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அமரர் இரா.சம்பந்தனின் மறைவினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சண்முகம் குகதாசனின் பெயர் வர்த்தமானியில் தற்போது வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா. சம்பந்தன் கடந்த (30.06.2024) இரவு 11 மணியளவில் கொழும்பில் காலமானார்.
இந்நிலையில், அவரது வெற்றிடத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் சண்முகம் குகதாசனின் பெயரை வர்த்தமானியில் அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்த நிலையில் தற்போது வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் சண்முகம் குகதாசன் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
அந்த தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் காலஞ்சென்ற பெருந்தலைவர் இராஜதவரோதயம் சம்பந்தனுக்கு பின்னர் அதிகூடிய வாக்குகளை அவர் பெற்றிருந்தார். பொதுத் தேர்தலில் அவர் 16,770 வாக்குகளைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஓரிரு சில தினங்களில் இலங்கை பாராளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமானம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருகோணமலை திரியாய் பகுதியை பிறப்பிடமாகக் கொண்டு நீண்ட காலமாக கனடாவில் வசித்து வந்த சண்முகம் குகதாசன், 2020 ஆம் ஆண்டு முதல் இலங்கை தமிழரசுக் கட்சியின் மாவட்ட கிளைத்தலைவராக இரண்டு சந்தர்ப்பங்களில் கடமையாற்றியுள்ளார்.
No comments:
Post a Comment