முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் 29 ஆம் திகதி இனங்காணப்பட்ட நிலையில் 3 கட்டங்களாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டபோது இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் இன்றுடன் (16) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
2 கட்டங்களின்போது 40 மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நிலையில் 3ஆம் கட்ட அகழ்வு கடந்த வியாழக்கிழமையன்று (04) ஆரம்பமாகி நேற்று (15) வரை 12 மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மனிதப் புதைகுழி இன்றுடன் தற்காலிகமாக மூடப்பட்டு அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன் தலைமையில் கண்காணிக்கப்பட்டு அகழ்வு பணிகள் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
இறுதி நாளான இன்று சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவா, பேராசிரியர் ராஜ்சோமதேவா, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி நிறஞ்சன், பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், முன்னால் வட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொக்கிளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கொக்கிளாய் பகுதி கிராம அலுவலகர் ஆகியோர் முன்னிலையில் 3ஆம் கட்ட அகழ்வு பணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் நீதிபதி முன்னிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
52 மனித எச்சங்களுடன், சான்று ஆதாரப் பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் இந்த மனிதப் புதைகுழி மேலும் நீடிப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்ற நிலையில் நீதிமன்ற அனுமதியுடன் பகுதிளயவில் மூடப்பட்டுள்ளன.
இன்னும் ஒருசில தினங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பணியகத்தினை சேர்ந்த அதிகாரிகள் பார்வையிட்டு முற்றுமுழுதாக இந்த மனிதப் புதைகுழிகளை மூடுவார்கள் என முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்தியஅதிகாரி க.வசுதேவா தெரிவித்துள்ளார்.
குறித்த மனிதப் புதைகுழி மூடும்போது நிலத்தில் குற்றவியல் பிரதேசம் என்ற எச்சரிக்கை துண்டு வழக்கு எண் ஏ.ஆர் 804/ 2024 என்றும் குற்றவியல் நீதிமன்றம் முல்லைத்தீவு 2023-2024 க்கு இடையில் தோண்டப்பட்டது என்றும் எழுதப்பட்ட மண்ணுள் பிரிகையடைய முடியாத இறப்பர் பொருட்களும் போடப்பட்டு மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment