19ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களே : நீடிப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - முன்னாள் பிரதம நீதியரசர் - News View

About Us

About Us

Breaking

Sunday, July 7, 2024

19ஆவது திருத்தச் சட்டத்தின்படி ஜனாதிபதியின் பதவிக் காலம் ஐந்து வருடங்களே : நீடிப்புக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் - முன்னாள் பிரதம நீதியரசர்

19ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி ஒருவருக்கான பதவிக் காலம் ஐந்து வருடங்களாகவே உள்ளதோடு, அதனை நீடிப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும், சர்வஜன வாக்கெடுப்பும் நடத்துவது அவசியமாகும் என்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தினை முறையற்ற வகையில் நீடிப்பதானது, மக்களின் இறைமையை கேள்விக்குள்ளாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ள அவர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டியது அவசியமாகும் என்றும் தொகுதி முறைமையிலான பாராளுமன்றத் தேர்தல் முறைமையே பொருத்தமானது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் அண்மைய நாட்களில் மேலெழுந்துள்ள மாறுபட்ட நிலைப்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் முதலாவது அரசியலமைப்பில் ஜனாதிபதியினதும், பாராளுமன்றத்தினதும் பதவிக் காலம் ஐந்து ஆண்டுகள் என்றே காணப்பட்டது.

அதன் பின்னர் ஜே.ஆர். ஜெயவர்தன இரண்டாவது குடியரசு யாப்பின் ஊடாக பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக் காலத்தினை ஆறு ஆண்டுகளாக மாற்றியமைத்தார். அதற்காக அவர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தியிருந்தார்.

அதன் பின்னர், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும், மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் இருந்த காலத்தில் ஜனாதிபதியின் பதவிக் காலமும் பாராளுமன்றத்தின் பதவிக் காலமும் ஐந்து ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.

இதற்காக 19ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது. அவ்வாறான நிலையில் தற்போது ஜனாதிபதியின் பதவிக் காலத்தினை நீடிப்பதாக இருந்தால் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையும் சர்வஜன வாக்கெடுப்பும் அவசியமாகும்.

ஜனாதிபதியின் பதவிக் காலத்தினை குறைப்பதாக இருந்தால் இந்தச் செயற்பாடுகள் அவசியமில்லை. ஆனால் அதனை அதிகாரிப்பதாக இருந்தால் நிச்சயமாக சர்வஜன வாக்கெடுப்பு அவசியமாகும். ஏனென்றால் மக்களிடத்திலேயே இறைமை உள்ளது.

ஆகவே மக்களின் இறைமையை கேள்விக்குட்படுத்த முடியாது. அந்த வகையில் ஜனாதிபதியின் பதவிக் காலம் நீடிப்பதாக இருந்தால் மக்களின் இறைமை கேள்விக்குள்ளாகும். எனவே சர்வஜன வாக்கெடுப்பின்றி பதவிக் காலத்தினை நீடிக்க முடியாது.

நிறைவேற்று அதிகார ஒழிப்பும் தேர்தல்முறை மாற்றமும் என்னைப் பொறுத்த வரையில், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவது மிகவும் முக்கியமானதொரு விடயமாகும். அதன் மூலமாக அதிகாரம் சார்ந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளியைக் காணமுடியும். உதாரணமாக இந்தியாவைப் போன்ற ஜனாதிபதி முறைமையை சம்பிரதாயமாக பின்பற்றுவதே பொருத்தமானதாகும்.

அதேபோன்றுதான் பாராளுமன்றத் தேர்தல் முறைமையையும் தொகுதி அடிப்படையில் நடத்துவது பொருத்தமானதாகும். தொகுதி முறைமையில் தேர்தல் நடத்தப்படுகின்றபோது பிரச்சினைகள் அதிகம் ஏற்படாது. மக்கள் தங்களது பிரதிநிதிகளை உரிமையுடன் தெரிவு செய்வதற்கான வாய்ப்பும் பிரதிநிதிகள் பொறுப்புக்கூறுவதற்கான சூழலும் உருவாகிறது என்றார்.

No comments:

Post a Comment