கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எழுத்து மூலம் உறுதிமொழி : கல்வி அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 19, 2024

கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எழுத்து மூலம் உறுதிமொழி : கல்வி அமைச்சர்

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பில் எழுத்து மூல உறுதிமொழியொன்று வழங்கப்படும் என்றும் அது தொடர்பான பேச்சுவார்த்தையொன்று நேற்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் இடம்பெற்றுள்ளதாகவும் கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) காமினி வலேபொட எம்பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்களின் கொடுப்பனவில் 25 வீத அதிகரிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கிணங்கவே தமக்கும் அந்த 25 வீத கொடுப்பனவினை வழங்க வேண்டும் என கல்வி சாரா ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த முறை வரவு செலவுத் திட்டத்தில் அதற்கான நிதியை ஒதுக்க முடியாதுள்ளதால் அடுத்து வரும் வரவு செலவு திட்டத்தின் மூலம் பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு அடுத்த ஜனவரி முதல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக புதிதாக நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் பல்கலைக்கழகங்களின் கையிருப்பிலிருந்து அந்த நிதியை பெற்றுக் கொடுப்பதற்கும் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் எத்தகைய கொடுப்பனவுகளை வழங்கினாலும் அதற்கு திறைசேரியின் அனுமதி முக்கியமாகிறது.

இந்த விடயம் தொடர்பில் நான் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதுடன் இரண்டு அமைச்சரவைப் பத்திரங்களையும் சமர்ப்பித்துள்ளேன்.

ஒரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்போது மற்றொரு தரப்பினரால் பிரச்சினை எழுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் அமைச்சரவை குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பின்னணியிலேயே நாம் கல்வி சாரா ஊழியர்களை கடமைக்கு சமூகமளிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளோம்.

நேற்றைய தினமும் அவர்களில் ஒரு தொழிற்சங்கத்தினர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அந்தப் பேச்சு வார்த்தையில் எழுத்து மூல உறுதிமொழியொன்றை வழங்குவதற்கு நாம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளோம்.

அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அதேவேளை அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளை கைவிட்டு கடமைக்கு சமூகமளிக்க வேண்டும் என்று நாம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

No comments:

Post a Comment