ஒன்பதாவது மாதத்தைத் தொட்ட காசா போரில் அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை - News View

About Us

About Us

Breaking

Saturday, June 8, 2024

ஒன்பதாவது மாதத்தைத் தொட்ட காசா போரில் அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை

காசா போர் நேற்றுடன் (07) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காசாவெங்கும் நீடிப்பதோடு குறிப்பாக மத்திய காசாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது. 

மாத்திய காசாவில் உள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற தாக்குதலில் அங்கு அடைக்கலம் பெற்றிருந்த பலஸ்தீனர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் நேற்றும் அகதி முகாம்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் கடுமையாக தாக்கின.

இந்தப் போரினால் காசா முழுவதும் சின்னாபின்னமாக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கொல்லட்டிருப்பதோடு அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர்.

கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்திற்குப் பின்னரான முதல் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான இராஜதந்திர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றபோதும் அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவில்லை. 

ஒரு வாரத்திற்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட மூன்று கட்ட போர் நிறுத்தத்தை ஒட்டியே புதிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன.

என்றாலும் கடந்த 2007 தொடக்கம் காசாவில் ஆட்சி புரிந்து வரும் ஹமாஸ் அமைப்பு பைடனின் திட்டத்திற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் தனது போர் திட்டத்தை தொடர்ந்து வலியுறுத்திவரும் இஸ்ரேல், பேச்சுவார்த்தைகளுக்கான விருப்பத்தையும் வெளியிட்டு வருகிறது.

காசாவெங்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்றபோதும் அது மத்திய காசாவில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக புரைஜ் மற்றும் மகாஸி அகதி முகாம்கள் மற்றும் டெயிர் அல் பலாவிலும் இஸ்ரேல் தரை மற்றும் வான் வழியாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இங்கு கடந்த வியாழக்கிழமை இரவு வீடு ஒன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தது ஆறு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். டெயர் அல் பலாஹ்வில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு புரைஜில் இடைவிடாது குண்டுகள் வீசப்பட்டு வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக முன்னெச்சரிக்கை இன்றி சனநெரிசல் மிக்க பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இவ்வாறு கடந்த வியாழனன்று நுஸைரத் முகாமில் உள்ள ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இடம்பெற்ற வான் தாக்குதல்களில் 40 க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்தத் தாக்குதல் மக்கள் எதிர்கொண்டுவரும் பயங்கரத்திற்கு மற்றொரு உதாரணம் என்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதல் தொடர்பில் முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் செயற்படும்படி இஸ்ரேலுக்கு வருடாந்தம் 3.8 பில்லியன் டொலருக்கு அதிகமான இராணுவ உதவியை வழங்கும் அமெரிக்கா கேட்டுள்ளது.

‘இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் உட்பட இந்தத் தாக்குதல் தொடர்பில் மேலும் விபரங்களை வெளியிடப்போவதாக இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது. அந்தத் தகவலைப் பகிரங்கப்படுத்துவதில் அவர்கள் முழுமையாக வெளிப்படைத் தன்மையுடன் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்’ என அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பேச்சாளர் மத்தியூ மில்லர் தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலை மீதான தாக்குதலைத் தொடர்ந்தும் நுஸைரத் அகதி முகாமில் இஸ்ரேலின் பீரங்கி மற்றும் வான் தாக்குதல்கள் நீடித்ததாக அங்கிருப்போர் குறிப்பிட்டுள்ளனர்.

புரைஜ் அகதி முகாமில் உள்ள மருத்துவ மையம் ஒன்றுக்கு அருகில் இருக்கு இசா குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்ததாக அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வடக்கில் காசா நகரில் உள்ள அல் சலாம் பள்ளிவாசலுக்கு அருகில் இருக்கும் அஷ்ரம் குடும்ப வீட்டின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதலில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக அங்குள்ள பப்டிஸ் மருத்துவமனை குறிப்பிட்டது.

மகாசி முகாமில் உள்ள வப்தி வீட்டின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஆறு பேர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக அல் அக்ஸா தியாகிகள் மருத்துவமனை வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

மறுபுறம் எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசாவின் ரபா நகரின் அல் சுல்தான் பகுதியை இலக்கு வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. காசாவில் கடல் மார்க்கமாகவும் இஸ்ரேலின் தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன. காசா நகரின் மேற்கு மற்றும் ஏனைய பகுதிகளின் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள வீடுகள் மீது இஸ்ரேலிய போர் கப்பல்கள் தாக்குதல் நடத்தின.

போர் நிறுத்த முட்டுக்கட்டை
கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,731 ஆக அதிகரித்துள்ளது என்று காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் அதிகப் பெரும்பாலானவர்கள் பொதுமக்களாவர்.

குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 77 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 221 பேர் காயமடைந்திருப்பதாக அந்த அமைச்சின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் போரினால் இஸ்ரேல் மீதான இராஜதந்திர தனிமைப்படுத்தல்கள் அதிகரித்திருப்பதோடு அதற்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்கு விசாரணை இடம்பெற்று வருகிறது. பல ஐரோப்பிய நாடுகளும் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரித்துள்ளன.

இதில் பலஸ்தீனத்தை அங்கீகாரித்த ஸ்பெயின், சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா தொடத்த காசாவில் பலஸ்தீனர்களுக்கு எதிரான ‘இனப்படுகொலை’ வழக்கில் பங்குதாரராக இணைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் எதிர்வரும் ஜூலை 24 ஆம் திகதி உரையாற்றுவதற்கு விடுத்த அழைப்பை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒப்புக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலிய சிறையில் உள்ள பலஸ்தீனர்களுக்கு பகரமாக காசாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் பணயக் கைதிகளை விடுவிப்பது, காசாவுக்கான உதவிகள் செல்வது மற்றும் காசாவில் ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் திட்டத்தை பைடன் ஒரு வாரத்திற்கு முன்னர் வெளியிட்டிருந்தார்.

இந்தத் திட்டத்திற்கு ஜி7 மற்றும் அரபு நாடுகள் ஆதரவு அளித்திருந்தன. இதனை ஏற்கும்படி பைடனுடன் 16 உலக நாட்டுத் தலைவர்கள் ஹமாஸை வலியுறுத்தி இருந்தனர். 

‘கால தாமதத்திற்கு நேரமில்லை. உடன்படிக்கையை ஏற்கும்படி நாம் ஹமாஸுக்கு அழைப்பு விடுக்கிறோம்’ என்று வெளியிடப்பட்ட கூட்டு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான எதிர்பார்ப்பை வெளியிடும் வகையில் ஹமாஸ் அமைப்பிடம் இருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்ததாக எகிப்து உயிர்மட்டத் தரப்புகளை மேற்கோள்காட்டி அந்நாட்டின் அல் கஹேரா செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

எனினும் பெய்ரூட்டில் இருக்கும் ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவரான ஒசாமா ஹம்தான் இந்த முன்மொழிவை ‘வெறுமனே வார்த்தைகள்’ என்று குறிப்பிட்டுள்ளார். 

‘அமெரிக்கர்கள் இதுவரையில், பைடன் தனது உரையில் கூறியதை உறுதிப்படுத்தும் ஆவணப்படுத்தப்பட்ட அல்லது எழுதப்பட்ட எதையும் முன்வைக்கவில்லை’ என்று அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

போர் நிறுத்தத் திட்டம் தொடர்பில் ஹமாஸ் இன்னும் எந்த பதிலையும் அளிக்கவில்லை என்று கட்டார் வெளியுறவு அமைச்சு வியாழக்கிழமை குறிப்பிட்டிருந்தது.

இதில் காசாவில் இருந்து இஸ்ரேலியப் படை முழுமையாக வெளியேறி நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை ஹமாஸ் கோரிவரும் அதேநேரம் இஸ்ரேல் அதனை நிராகரித்து வருவதோடு போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் பிரதான முட்டுக்கட்டையாக உள்ளது.

No comments:

Post a Comment