அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கமைய சட்டமா அதிபர் சஞ்சய் இராஜரத்தினத்தின் சேவையை மேலும் 06 மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பரிந்துரையை மீண்டும் அரசியலமைப்புச் சபைக்கு அனுப்ப ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சய் இராஜரத்தினத்தின் 06 மாத கால சேவை நீடிப்புக்கான பரிந்துரையை அரசியலமைப்புச் சபைக்கு ஜனாதிபதி அனுப்பி வைப்பாரென இந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவரது சேவை நீடிப்புக்கு, அரசியலமைப்புச் சபையிலுள்ள மூன்று சிவில் செயற்பாட்டாளர்கள், ஒரே கடிதத்தின் மூலம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள்.
இவர்கள் எதிர்க்கும் தீர்மானத்தின் சட்ட நிலையை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்புச் சபையின் தலைவரும் சபாநாயகருமாகிய மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு அனுப்பும் கடிதத்தில் குறிப்பிடுவாரென்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஜனாதிபதியின் பரிந்துரையின் பேரில் பிரதம நீதியரசர் மற்றும் சட்டமா அதிபர் பதவிகளுக்கு தனிநபர்களின் பெயர்களை ஜனாதிபதி அரசியலமைப்புச் சபைக்கு பரிந்துரை செய்ய வேண்டுமென அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஒரு ஷரத்தை நிறைவேற்றிய போதிலும், அது 20 ஆவது திருத்தத்தின் மூலம் நீக்கப்பட்டது. மீண்டும், 21ஆவது திருத்தத்தின் கீழ், 19ஆவது திருத்தத்தில் அதே ஷரத்து சேர்க்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயரை அரசியலமைப்புச் சபை நிராகரித்தால், அந்தப் பெயரை மீண்டும் குறிப்பிட முடியும் என்றும் அந்தப் பேச்சாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment