விடுதலைப் புலிகள் அமைப்பை போன்று செயற்படும் காட்டு யானைகள் - விமலவீர திஸாநாயக்க - News View

About Us

About Us

Breaking

Friday, June 7, 2024

விடுதலைப் புலிகள் அமைப்பை போன்று செயற்படும் காட்டு யானைகள் - விமலவீர திஸாநாயக்க

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

காட்டு யானைகளால் இரவில் நிம்மதியாக உறங்க முடியவில்லை. வெளியில் நடமாட முடியவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பினை போல் யானைகள் செயற்படுகின்றன. சுற்றாடல் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் சிறந்த திட்டம் ஏதும் கிடையாது. நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்பவர்களின் வீடுகளை யானைகள் தாக்குவதில்லை என முன்னாள் வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற அமர்வில் வாய் மூல விடைக்கான வினாக்களின்போது வனஜீவராசிகள் அமைச்சர் பவித்ரா வன்னியராட்சி பதிலளித்துக் கொண்டிருக்கும்போது குறுக்கிட்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் காட்டு யானை பிரச்சினைகள் காணப்படுகின்றன. வருடாந்தம் கோடிக்கணக்கான சொத்துக்கள் சேதமாக்கப்படுகின்றன. யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கும்போது டொலர்களில் நிவாரணம் பெறும் தரப்பினர் நீதிமன்றத்தை நாடி முன்னெடுக்கவிருந்த செயற்பாடுகளுக்கு தடையுத்தரவை பெற்றுக் கொள்கிறார்கள்.

யானைகளுக்கு குழிகள் வெட்டும் திட்டத்தை நான் ஆரம்பித்தேன். யானைகளுக்கு ஆதரவாக தடையுத்தரவு பெறும் தரப்பினரது வீடுகளை யானைகள் தாக்குவதில்லை. வழக்குத் தாக்கல் செய்பவர்களின் வீடுகளையும் யானைகள் தாக்குவதில்லை. அப்பாவி மக்களின் வீடுகளைத்தான் யானைகள் தாக்குகின்றன. இறுதியில் யானைகளும் உயிரிழக்கின்றன. மனிதர்களும் உயிரிழக்கிறார்கள். இது தேசிய பிரச்சினை.

யானைகளால் பிரதேசவாசிகள் தமது கிராமங்களை விட்டு வெளியேறுகிறார்கள். விவசாயத்துறையை மேம்படுத்த வேண்டுமாயின், யானை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும். உடவளவை பகுதியில் யானைகளின் வருகையை தடுப்பதற்கு நான் குழிகள் வெட்டினேன். தற்போது அப்பகுதியில் யானை பிரச்சினைகள் இல்லை.

சுற்றாடல் துறைசார் நிபுணர்கள் என்று குறிப்பிட்டுக் கொள்பவர்களிடம் சிறந்த திட்டமில்லை. இரவில் உறங்க முடியவில்லை. வீதியில் செல்ல முடியவில்லை. மாணவர்கள் பாடசாலைக்கு கூட செல்ல முடியவில்லை. விடுதலைப் புலிகள் போல் யானைகள் பொதுமக்களை அடித்துக் கொள்கின்றன என்றார்.

No comments:

Post a Comment