எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் : மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அவரிடம் உள்ளது - சிவநேசதுரை சந்திரகாந்தன் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 22, 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் : மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் அவரிடம் உள்ளது - சிவநேசதுரை சந்திரகாந்தன்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தமது கட்சி ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சியின் தலைவரும், இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் TMVP கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (22) மட்டக்களப்பில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கினால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களுக்கு சொந்தக் காலில் நிற்கும் வாய்ப்புக் கிடைக்கும் என சிவநேசதுரை சந்திரகாந்தன் இங்கு தெரிவித்தார்.
TMVP கட்சியின் தலைவர் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மேலும் தெரிவிக்கையில், ‘’இன்று ஒரு வரலாற்று முக்கியத்துவமிக்கதொரு நாளாகும். கிழக்கு மாகாணத்தின் தமிழ் மக்களின் தலைவிதியிலும் எதிர்கால அபிவிருத்தியிலும் ஒரு புள்ளியாக அமையும் என்பதில் ஐயமில்லை. 

எமது மாவட்டம் உட்பட கிழக்கு மாகாணம் விவசாயம் மற்றும் மீன்படித் துறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் இருக்கின்ற பொருளாதார வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றால் நிச்சயமாக ரணில் விக்ரமசிங்கவுடன் ஒன்றிணைய வேண்டும். ஏனென்றால் இங்கு உள்ள வளங்களை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற கொள்கையோடு அவர் இருக்கின்றார். அதனால்தான் நாம் அவருக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை மாகாண சபை மூலம் இயன்றளவு வழங்குவதுடன் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று வெளிப்படையாகக் கூறுகின்றார். எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்காலத்தில் இந்த தீர்வுகளைப் பெற்றுத் தருவார் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. எனவே அதற்கு அவசியமான சூழலையும் சந்தர்ப்பத்தையும் உருவாக்கிக் கொடுக்கும் பொறுப்பு எமக்கு இருக்கின்றது. 
தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி நிலையிலும் கூட மட்டக்களப்பு மாவட்டத்தின் வீதி அபிவிருத்திப் பணிகளுக்கு அவசியமான நிதிகளை ஒதுக்கித் தந்துள்ளார். நாம் அவற்றுக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

நாட்டின் நிர்மாணத்துறை, உற்பத்தித் துறை, விவசாய நவீனமயமாக்கல், மீன்படித்துறை, தொழில்நுட்பத் துறை மற்றும் AI தொழிநுட்பம் போன்றவற்றை உயர் மட்டத்திற்கு கொண்டு வரக்கூடிய ஆற்றல், அறிவு மற்றும் திட்டமிட்ட அடிப்படையில் பணியாற்றக்கூடிய தலைவராக ஜனாதிபதி இருக்கின்றார். 

இவற்றை முன்னேற்றும் வேலைத்திட்டங்களை அமுலாக்கக் கூடிய நிர்வாக வாய்ப்பை பெற்றுக்கொடுத்தால் மண்ணை நம்பி வாழும் கிழக்கு மாகாண மக்கள் நிச்சயமாக சொந்தக் காலில் நிற்பார்கள். எமது அழைப்பையேற்று எமது அலுவலகத்திற்கு வருகை தந்தமைக்காக ஜனாதிபதிக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கிறேன்.‘’ என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

No comments:

Post a Comment