தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் திருத்தச் சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரண் : பாராளுமன்றத்துக்கு அறிவித்த உயர் நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, June 18, 2024

தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் திருத்தச் சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரண் : பாராளுமன்றத்துக்கு அறிவித்த உயர் நீதிமன்றம்

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் (திருத்தம்) சட்டமூலத்தின் ஒருசில ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை. இந்த சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டுமாயின் விசேட பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் வியாக்கியானம் வழங்கியுள்ளது. அத்துடன், சட்டமூலத்தின் ஒன்பது உறுப்புரைகள் அரசியலமைப்புக்கு முரண் அவற்றை அரசியலமைப்புக்கு இயைவாக திருத்தம் செய்தால் அரசியலமைப்பு முரண் தன்மை நீங்கும். திருத்தங்களின்றி நிறைவேற்றுவதாயின் அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும் எனவும் உயர் நீதிமன்றம் தனது வியாக்கியானத்தில் குறிப்பிட்டுள்ளது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமர்வின்போது இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் (திருத்தச்) சட்டமூலம் குறித்து உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்தை வாசிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் (திருத்தம்) சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் எனக்கு கிடைத்துள்ளது என்பதை சபைக்கு அறிவிக்கிறேன். சட்டமூலத்தின் அரசியலமைப்பு தன்மையின் பொழிப்பு வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமூலத்தின் 08,09,12,13,18(5).18 (7),20,33,35 ஆகிய ஒன்பது உறுப்புரைகள் அரசியலமைப்பின் ஏற்பாடுகளுக்கு முரணானதாகும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய திருத்தம் செய்தால் அரசியலமைப்பு முரண் தன்மை நீங்கும், இவற்றை திருத்தம் செய்யாமல் நிறைவேற்றுவதாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள வேண்டும்.

சட்டமூலத்தின் உத்தேச 9 (2) உறுப்புரை அரசியலமைப்பின் 12(1) உறுப்புரைக்கு முரணானது. எவ்வாறாயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய 'வழங்க முடியும்' என்ற சொற்பதத்துக்கு பதிலாக 'செய்ய வேண்டிய' என்ற சொற்பதத்தை சேர்த்தால் முரண்பாடான தன்மை நீங்கும்.

அத்துடன் 9 ஆவது உறுப்புரை அரசியலமைப்பின் 12(1) உறுப்புரைக்கு முரணாக காணப்படுவதுடன், அதனை அரசியலமைப்பின் 84(2) அத்தியாயத்துக்கு அமைய விசேட பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் உறுப்புரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய திருத்தங்களை மேற்கொண்டால் அரசியலமைப்பு முரண் தன்மை நீங்கும்.

சட்டமூலத்தின் 17(10 உறுப்புரை அரசியலமைப்பின் 12(1) உறுப்புரைக்கு முரணானது. இதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியலமைப்பின் 84(2) உறுப்புரையின் பிரகாரம் விசேட பெரும்பான்மையை பெற்றுக் கொள்ள வேணடும்.

அத்துடன் உத்தேச 17(1) மற்றும் 17(ஈ) ஆகிய உறுப்புரைகள் அரசியலமைப்பின் 12(1) உறுப்புரைக்கு முரணானதுடன்,அதனை நிறைவேற்ற வேண்டுதாயின் 84(2) உறுப்புரைக்கு அமைய விசேட பெரும்பான்மையை பெற வேண்டும்.

22(3) மற்றும் 22(3 ஈ) உறுப்புரைகள் அரசியலமைப்பின் 14(1), மற்றும் 12(1) உறுப்புரைகளின் ஏற்பாடுகளுக்கு முரணானதுடன் இதனை நிறைவேற்ற வேண்டுமாயின் அரசியலமைப்பின் 84(2) பிரகாரம் விசேட பெரும்பான்மையை பெற வேண்டும்.

எவ்வாறாயினும் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகையில் 18(5) உறுப்புரையின் பிரகாரம் திருத்தம் செய்தால் அரசியலமைப்பு முரண் தன்மை நீங்கும்.

No comments:

Post a Comment