தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்.
சிரேஷ்ட அரசியல்வாதியான இவர் தனது 91ஆவது வயதில் காலமானார்.
முதுமை காரணமாக நோயுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (30) காலமானார்.
இவர் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார்.
இவர் 2015 முதல் 2018 வரை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
சுமார் அரை நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆர். சம்பந்தன் சபையில் துணிச்சலான மற்றும் தொடர்ச்சியாக குரல் கொடுத்தவர்.
2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத’ நாட்டிற்குள், தமிழர்களுக்கு சம உரிமைகளை அவர் அயராது கோரினார்.
சட்டத்தரணியான அவர், இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு மற்றும் தென்னிலங்கை சிங்கள ஸ்தாபனங்கள் கடந்த காலத்தில் வழங்கிய ஆனால் நிறைவேற்றத் தவறிய பல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வுக்கான வாதங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தார்.
இதேவேளை, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக இரா. சம்பந்தனுக்கு 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
அதன்போது, இரா. சம்பந்தன் சுகயீனமுற்றிருப்பதாகவும் விடுமுறை வழங்குமாறும் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்த நிலையிலேயே அந்த அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment