அன்று ஆரம்பித்து வைத்த ரணில் விக்ரமசிங்கவே இன்று ஜனாதிபதியாக திறந்து வைத்துள்ளார் - ஆளுநர் செந்தில் தொண்டமான் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 22, 2024

அன்று ஆரம்பித்து வைத்த ரணில் விக்ரமசிங்கவே இன்று ஜனாதிபதியாக திறந்து வைத்துள்ளார் - ஆளுநர் செந்தில் தொண்டமான்

‘’இன்று ஜனாதிபதி ரணில் விகரமசிங்கவை வரவேற்பதில் பெருமை கொள்கிறோம். இந்தத் திட்டம் அவரால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதைக்கூற வேண்டும். அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் வழங்கப்பட்ட சுமார் ஒரு பில்லியன் ரூபா ஒதுக்கீட்டின் கீழ் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அன்று, இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்த ரணில் விக்ரமசிங்கவே இன்று ஜனாதிபதியாக இந்தக் கட்டிடத்தைத் திறந்து வைத்துள்ளார் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அரசாங்கம் முன்னெடுத்துவரும் ‘உறுமய தேசிய வேலைத்திட்டத்தின்’’ கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் உரையாற்றும்போதே கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு, திராய்மடு மாவட்ட செயலக வளாகத்தில் ஜனாதிபதி தலைமையில் இன்று (22) நடைபெற்றது.

இதற்கு முன்னதாக மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 1,055 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மாவட்ட செயலகத்திற்கான புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைத்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது, 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11 ஆம் திகதி அப்போதைய உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்தன இந்த புதிய மாவட்ட செயலகத்தின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கான சேவைகளை விஸ்தரித்து வினைத் திறனாக்கும் நோக்கில் இந்த புதிய மாவட்ட செயலகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பெயர் பலகையை திரைநீக்கம் செய்து மாவட்ட செயலகத்தை திறந்து வைத்த ஜனாதிபதி, அங்கு கண்காணிப்பு விஜயத்தையும் மேற்கொண்டார். இதன் பின்னர் மட்டக்களப்பு மக்களுக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் காணி உரிமையற்ற 27,595 குடும்பங்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ளது. அதில் இதுவரை 2610 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர உயர்தர தேசிய பொறியியல் டிப்ளோமா நிறுவனத்தில் ஆங்கில டிப்ளோமா பெற்ற 252 பேருக்கும் இன்று ஜனாதிபதி தலைமையில் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

காணி உறுதிப்பத்திரங்களை வழங்கும் நிகழ்வில் மேலும் உரையாற்றிய கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், நாட்டின் உற்பத்தியை அதிகரிக்க விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு ஜனாதிபதி எப்பொழுதும் எமக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த விவசாய திணைக்களத்துடன் இணைந்து செயற்படுகின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டம் அதிகளவான விவசாயிகளைக் கொண்ட விவசாய மாவட்டம் என்பதைக் கூற வேண்டும். அத்துடன் நாட்டின் மிக நீளமான கடற்கரை கிழக்கு மாகாணத்தில் அமைந்திருப்பதால் நீர் வாழ் உயிரினங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஜனாதிபதி எமக்கு எடுத்துக் காட்டியுள்ளார். எனவே, மீன் வளர்ப்புத் திட்டங்களுக்கு உள்நாட்டு விவசாயிகள் மற்றும் வர்த்தகங்களை ஊக்குவிக்க நாம் தற்போது செயற்பட்டு வருகிறோம்.

மேலும், எங்களிடம் அதிக அளவில் கணிமப் படிவுகள் உள்ளது. அதற்கு பெறுமதி சேர்த்து, கனிமத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இத்திட்டங்கள் அனைத்தையும் அபிவிருத்தி செய்வதற்கு நாம் மிகவும் ஊக்கத்துடன் செயற்பட்டு வருகின்றோம்.’’ என்று ஆளுநர் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதேச அரசியல் பிரதிநிதிகள், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் ஜே. முரளிதரன், கிழக்கு மாகாண கல்விச் செயலாளர் எச். இ. எம். டபிள்யூ. ஜி. திஸாநாயக்க மற்றும் அரச அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment