ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட கலந்துரையாடல் 26-27 ஆம் திகதிகளில் நடைபெறும் - அலி சப்ரி - News View

About Us

About Us

Breaking

Friday, June 14, 2024

ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விசேட கலந்துரையாடல் 26-27 ஆம் திகதிகளில் நடைபெறும் - அலி சப்ரி

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையின் முன்னாள் இராணுவச் சிப்பாய்களை நாட்டுக்கு திருப்பி வரவழைப்பதற்கு அவசியமான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தலைமையிலான குழுவொன்று ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அது தொடர்பான கலந்துரையாடல் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைய வேண்டுமா என்பது குறித்து தீர்மானிப்பதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஆய்வு செய்ய அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் அறிக்கை இம்மாதம் கிடைக்கப்பெறும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் அலி சப்ரி, “ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார். அதன்படி இந்திய வெளிவிவகார அமைச்சர் இம்மாதம் இலங்கை வருவார் என எதிர்பார்க்கின்றோம். அதனையடுத்து இந்தியப் பிரதமரின் விஜயமும் விரைவில் இடம்பெறும் என நம்புகிறோம்.

மேலும், இக்காலகட்டத்தில் அரசாங்கம் பாரிய வெற்றிகளை அடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் தொடர்பான இரண்டாவது மீளாய்வை வெற்றிகரமாக முடித்தமைக்கு சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான மூன்றாவது தவணை விடுவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நாம் மிகத் துல்லியமாகக் கையாண்டுள்ளோம் என்பதே இதன் மூலம் தெளிவாகின்றது.

மேலும், வெளிநாட்டுக் கடனை முகாமைத்துவம் மற்றும் மறுசீரமைப்புச் செயற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. வெளிநாடுகளுடன் கடன் முகாமைத்துவம் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும் என்றும் நம்புகிறோம். வெளிநாட்டு பிணைமுறி உரிமையாளார்களுடனான கலந்துரையாடல் சாதகமானதாக அமைந்துள்ளது. அது வெற்றியடையும் பட்சத்தில் இலங்கை கடன் செலுதாத சூழ்நிலையில் இருந்து விடுபட்டு கடனை திருப்பிச் செலுத்தும் நாடாக மாற முடியும்.

அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த மாதம் நான் ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளேன். இருதரப்பு உத்தியோகபூர்வ கடன் வழங்குநர்களுடன் உடன்பாடு எட்டப்பட்ட பின்னர், ஜப்பானின் ஆதரவுடன் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது தடைப்பட்டுள்ள அனைத்து அபிவிருத்தித் திட்டங்களும் மீண்டும் தொடங்கப்படும் என்று ஜப்பான் உறுதியளித்துள்ளது.

அண்மையில், ரஷ்யாவில் நடைபெற்ற பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றேன். பிரிக்ஸ் அமைப்பில் இலங்கை இணைய வேண்டுமா என்பது குறித்து கலந்துரையாட வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, திறைசேரி, நிதியமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழுவொன்று இந்த விடயத்தை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை இம்மாதம் கிடைத்த பின்னர் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்.

மேலும், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள முன்னாள் இராணுவ வீரர்கள் குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் உடன் மேலும் கலந்துரையாடினோம். இப்பிரச்சினைக்குத் தீர்வு காண வெளிநாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட குழுவினர் ரஷ்யாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஜூன் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ரஷ்யாவில் நடைபெறும். இதேவேளை, மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான கலந்துரையாடல்களும் இந்நாட்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment