இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ (Benjamin Netanyahu) மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் (Yoav Galant) ஆகியோரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்கறிஞரான கரிம் கான் (Karim Khan) வலியுறுத்தியுள்ளார்.
அத்தோடு, காசா மீது இஸ்ரேல் இராணும் அப்பாவி பொதுமக்கள் மீது குண்டுகள் வீசி போர்க் குற்றம் செய்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா (South Africa) வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்நிலையில், தென்னாப்பிரிக்கா முன்வைத்துவரும் இந்த குற்றச்சாட்டை இஸ்ரேல் தொடர்ந்தும் மறுத்து வருகிறது.
இதன்படி, இஸ்ரேல் - ஹமாஸ் போர் விவகாரம் குறித்து கருத்த தெரிவித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் கரிம் கான், ஹமாஸ் அமைப்பு மனிதகுலத்திற்கு எதிராக போர்க் குற்றத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை, காசா மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தியபோது மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் செய்தமையால் இஸ்ரேல் இராணுவமும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டுள்ளதாக வழக்கறிஞர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன் காரணமாக, பலஸ்தீன பச்சிளம் குழந்தைகள், சிறுவர்கள் பெண்கள் ஆகியோர் அதிகளவில் உயிரிழந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடுமைகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதன் காரணமாக ஹமாஸ் தலைவர்கள் இஸ்மாயில் ஹனியே, முகம்மது தியாப் இப்ராஹிம் அல்-மஸ்ரி, யாஹ்யா சின்வர் ஆகியோரை கைது செய்யவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலன்ட் ஆகியோரை கைது செய்யவும் பிடியாணை பிறப்பிக்க வேண்டும் என வழக்கறிஞரான கரிம் கான் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment