இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்று முதல் (14.05.2024) மேலும் 5 ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
‘ஊபா’ சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீடித்துள்ளது மத்திய அரசு.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 1980 களில் இந்திய அரசு ஆதரவளித்தது. அதே நேரத்தில் 1987- ஆம் ஆண்டு இந்தியா - இலங்கை இடையேயான தமிழர் அரசியல் பிரச்சினை தொடர்பான ஒப்பந்தம் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தியது. இதனால் இலங்கையில் அமைதிப் பணிக்கு சென்ற இந்திய இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே யுத்தம் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். ராஜீவ் காந்தி படுகொலைக்கு காரணம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் என்பது குற்றச்சாட்டு ஆகும்.
இதனால் விடுதலைப் புலிகள் இயக்கம் 1991 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீடிக்கப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை ஆணையம் விசாரணை ஒன்றை நடத்தி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்தும் வருகிறது இந்திய மத்திய அரசு.
2009 ஆம் ஆண்டு இலங்கை இறுதி யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப்பட்டது. ஆனாலும் இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை நீடிக்கப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் கடந்த 2019- ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நீடிக்கப்பட்டது.
அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், வன்முறை சார்ந்த நடவடிக்கைகளில் புலிகள் இயக்கம் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், இந்திய குடிமக்களுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் வகையில் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான நிலையை கடைப்பிடிப்பதாகவும் முன்னைய தடையின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடை நேற்று முதல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கையில், வெளிநாடுகளில் வாழும் விடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக தொடர் பிரசாரம் செய்வதாகவும் மத்திய அரசு - இந்திய அரசியல் சாசனத்துக்கு எதிரான வெறுப்புணர்வை அதிகரிக்க செய்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment