மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளார்.
‘உமா ஓயா’ பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்துகொள்வதற்காக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி எதிர்வரும் 24ஆம் திகதி இலங்கை வரவுள்ளார்.
குறிப்பிட்ட திட்டம் ஈரான் அபிவிருத்தி வங்கியின் கடன் உதவியின் கீழ் கடந்த 2010ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் தேசிய மின் கட்டமைப்புக்கு 120 மெகா வோட் மின்சாரம் உள்வாங்கப்படவுள்ளது.
மின்சார உற்பத்திக்கு மேலதிகமாக இத்திட்டத்தின் கீழ் குடிநீர் மற்றும் விவசாயத்துக்கு தேவையான நீர் விநியோகமும் திட்டமிடப்பட்டுள்ளது.
529 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இத்திட்டத்தின் நிர்மாண வேலைகள் கடந்த 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.
இத்திட்டத்தின் நிர்மாண வேலைகள் கடந்த 2015ஆம் ஆண்டு இறுதியில் பூர்த்தி செய்யப்படுவதற்குத் திட்டமிட்டிருந்த போதும் பல்வேறு தடைகள் காரணமாக காலதாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் தலைமையில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இஸ்ரேல் மீது ஈரான் கடந்த சனிக்கிழைமை (13) வான் வழித்தாக்குதலை நடத்திய நிலையில், பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றநிலைக்கு மத்தியில் ஈரான் ஜனாதிபதியின் விஜயம் அமையவிருக்கின்றது.
இஸ்ரேலின் அமைச்சரவை கூட்டத்தில் ஈரானுக்குள் தாக்குதல் நடத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இடம்பெறவுள்ளமை சர்வதேச அளவில் கவனயீர்ப்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Vidivelli
No comments:
Post a Comment