தேர்தல்களை பிற்போடுவதை சிறிதளவும் சகித்துக் கொள்ளப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் இடம்பெற்றால் அதனை சிறிதளவும் சகித்துக் கொள்ளப்போவதில்லை அதனை எதிர்க்கவும் தயங்கப்போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தேர்தல்களை பிற்போடுவது சர்வஜன வாக்குரிமை குறித்த மக்களின் நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கௌசல்ய நவரட்ண மக்களின் வாக்குரிமைக்கு சவால் விடுக்கின்ற விடயமாகவும் இது மாறும் என தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் எது முதலில் இடம்பெற வேண்டும் என தெரிவிக்கும் அரசமைப்பு ஏற்பாடுகள் எதுவும் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர் அரசமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் இந்த தேர்தல்கள் இடம்பெற வேண்டும் என்றே சட்டம் தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கு பதில் தற்போதைய ஜனாதிபதி ஆட்சி புரிகின்றார் என்றாலும் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் இந்த நவம்பருடன் முடிவிற்கு வருகின்றது என தெரிவித்துள்ள கௌசல்ய நவரட்ண நவம்பருக்கு முன்னர் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தின் ஆயுள்காலம் முடிவடைந்ததும் நாடாளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் நாடாளுமன்றத்தை அதற்கு முன்னர் கலைக்க முடியுமென்றால் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தலை நடத்த வேண்டியது நாடாளுமன்றத்தினதும் தேர்தல் ஆணையகத்தினதும் கடமை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தலை பிற்போடுவதற்கான ஏற்பாடுகள் எதுவும் அரசமைப்பில் இல்லை இதற்கு அரசமைப்பு ஏற்பாடுகள் அவசியம் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அல்லது நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு ஆதரவு மற்றும் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே அதனை செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த முடியுமென்றால் நிச்சயமாக உங்களால் தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment