பிரதான சூத்திரதாரிகள், தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் : ஏழு அம்ச அறிக்கையை கையளித்து உறுதியளித்துள்ள தேசிய மக்கள் சக்தி - News View

About Us

About Us

Breaking

Thursday, April 18, 2024

பிரதான சூத்திரதாரிகள், தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் : ஏழு அம்ச அறிக்கையை கையளித்து உறுதியளித்துள்ள தேசிய மக்கள் சக்தி

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் மற்றும் இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைவரும் குற்றவியல் சட்டத்தின் கீழ் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் தண்டிக்கப்படுவார்கள் என அந்த கட்சியின் சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையுடன் இன்று (18) இடம்பெற்ற சந்திப்பை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இதனை கூறியுள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் இன்று கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையை சந்தித்துள்ளனர்.

இதன்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவது தொடர்பான கட்சியின் 7 அம்ச அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய கட்சியின் சட்டத்தரணி சுனில் வட்டகல, ”இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதியுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகவுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த தரப்பினரை இத்தருணம் நான் நினைவு கூறுகிறேன்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரிகளை கண்டறிந்து ஆட்சியில் உள்ள தரப்பினர் அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பார்கள் என இதுவரை காலம் காத்திருந்தாலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை நீதி பெற்றுக் கொடுக்கப்படவில்லை.

அத்துடன், குற்றவாளிகள் அடையாளங்காணப்படவில்லை. இந்த தாக்குதலின் குற்றவாளிகள் மற்றும் பிரதான சூத்திரதாரிகள் உயர்மட்ட அரசியல் சக்திகளினால் பாதுகாக்கப்படுகின்றனர். இந்த நிலையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தமது கட்சியின் ஆட்சியில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 (உயிர்த்த ஞாயிறு தினம்) கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக் கொண்டு தீவிரவாதிகள் குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்ட மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு இன்றளவில் ஐந்து வருடங்கள் கழிந்துள்ளன. மேற்படி துர்ப்பாக்கியமான தினத்தன்று மூன்று தேவாலயங்கள் மீதும் சில சுற்றுலாத்துறை ஹோட்டல்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமானமற்ற குண்டுத் தாக்குதலால் கிறிஸ்தவ/கத்தோலிக்க அடியார்கள் உள்ளிட்ட இருநூற்றி எழுபத்தி மூன்று பேர் (273) உயிரிழந்ததோடு ஐநூறுக்கு மேற்பட்டவர்கள் பூரணமான அல்லது பகுதியளவிலான ஏலாமை நிலையுற்றவர்களாக மாறியுள்ளார்கள். அவ்விதமாக இழந்த உயிர்கள் மற்றும் மேற்படி தாக்குதல் காரணமாக அழிவடைந்த ஆதனங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கு பொறுப்பு உள்ளதென்பதும், இந்தப் பொறுப்பினை இற்றைவரை முறைப்படி ஈடேற்றியுள்ளதா எனும் விடயம் சம்பந்தமாக கேள்விக்குறியொன்று உள்ளதென்பதால் தேசிய மக்கள் சக்தி என்றவகையில் கீழ்க்காணும் விடயங்களை மக்களின் கவனத்திற்கு கொண்டுவருவதோடு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் அந்த விடயங்கள் சம்பந்தமாக முறைப்படி சட்டத்தை அமுலாக்குமெனவும் வலியுறுத்துகிறோம்.

1. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையை உருவாக்கி இனக் கலவரங்களை ஏற்படுத்தி பெருந்தொகையான உயிராபத்துக்களையும் ஆதன அழிவினையும் ஏற்படுத்தி குறுகிய அரசியல் நோக்கத்தை அடைவதற்காக ஏதேனுமொரு குழுவினால் நெறிப்படுத்தப்பட்ட சதித்திட்டமாக அமைவதோடு மேற்சொன்ன குற்றச் செயலுடன் தொடர்புடைய சூத்திரதாரியையும் திட்டமிட்டவர்களையும் சட்டத்தின்முன் கொண்டுவந்து நிறுத்த வேண்டியது தேசிய மக்கள் சக்தி அரசாங்கமொன்றின் முதன்மைப் பணியாக அமைகின்றது.

2. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொள்ள முன்னர் அது சம்பந்தமான சரியான தகவல்கள் கிடைத்திருக்கையில் அந்த தாக்குதலை தடுத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்காத மற்றும் மேற்படி தாக்குதல் சம்பந்தமாக மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணைகளை திசை திருப்பி, அதன் உண்மையான சதிகாரர்களை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொண்டு, மேற்படி தாக்குதலுக்கு உண்மையிலேயே பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர்களை இனங்கண்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை தடுத்த பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், வேறு உத்தியோகத்தர்கள், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை உள்ளிட்ட அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய ஒவ்வோர் அரசியல் அதிகாரிகளையம் சட்டத்தின்முன் கொண்டுவர நடவடிக்கை எடுத்தல்.

3. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பாதிக்கப்பட்டவர்களால் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் வழக்கில் தவறாளிகளாக காணப்பட்ட அரசியல் அதிகாரிகளுக்கும் அரச உத்தியோகத்தர்களுக்கும், ஏற்கெனவே ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கையின் விதப்புரைகளில் உள்ளடக்கப்பட்ட அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கும் தராதரம் பாராமல் குற்றவியல்சார்ந்த குற்றச்சாட்டுகளை தாக்கல்செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தினால் இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பந்தமாக நியமிக்கப்படவுள்ள விசேட புலன்விசாரணை ஆணைக்குழுவின் விதப்புரைகளையும் அடிப்படையாகக் கொண்டு அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய அரசியல் அதிகாரிகள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் குற்றவியல்சார்;ந்த குற்றச்சாட்டுகளை தாக்கல்செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
4. இந்த தாக்குதல் தொடர்பாக தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகளை முந்துரிமை அடிப்படையில் இயலுமானவரை சீக்கிரமாக விசாரித்து நிறைவு செய்யுமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் வேண்டுகோள் விடுத்தலும் அதற்கு அவசியமான வசதிகளை வழங்குதலும்.

5. இந்த தாக்குதலுடன் தொடர்புடைய ஏற்கெனவே இந்நாட்டிலிருந்து தப்பியோடியுள்ள அனைத்துக் குற்றவாளிகளையும் இந்நாட்டுக்கு வரவழைப்பித்துக் கொள்ள அவசியமான நடவடிக்கைகளை எடுத்தலும் இந்த தாக்குதலுக்கான திட்டம் தீட்டியவர்களையும் சதிகாரர்களையும் தராதரம் பாராமல் தண்டித்தலும்.

6. இந்த தாக்குதலில் பலியானவர்களின் உயிர்கள் மற்றும் ஆதனங்களுக்கான முறையான நட்டஈட்டு முறையியலொன்றை அறிமுகம் செய்தல், அவர்கள் அனுபவித்து வருகின்ற உளத்திரிபு நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுக்கக்கூடிய வகையிலான உளவியல் சார்ந்த வேலைத்திட்டமொன்றை அறிமுகம் செய்தல்.

7. இது சம்பந்தமாக நியமித்த விசேட ஆணைக்குழுக்கள் மற்றும் வேறு புலன்விசாரணைகள் மூலமாக வெளிக்கொணரப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்தும் பல்வேறு புலன்விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டிய விடயங்கள் நிலவுவதால் அது சம்பந்தமாக மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்கும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களுக்கு நீதி நிலைநாட்டப்படுவதை நோக்கமாகக்கொண்டு முழுமையான நீதித்துறை தத்துவம் கொண்ட விசேட புலன்விசாரணை ஆணைக்குழுவொன்றை நிறுவி அதன் விதப்புரைகளின்பேரில் மிகவும் குறுகிய காலத்திற்குள் இந்த தாக்குதலை மேற்கொள்ள சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் பலவிதமாக அதற்குப் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர்களுக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்கவும், அதனடிப்படையில் தண்டனை வழங்கவும் எந்தவிதமான தயக்கமுமின்றி தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமெனவும் இலங்கை மக்களுக்கு இத்தால் அறிவிக்க விரும்புகிறோம்.

No comments:

Post a Comment