சனிட்டரி நப்கின்கள் உள்ளிட்ட மாதவிடாய்கால உபயோகப் பொருட்களுக்கான வரிகளை முற்றாக நீக்குங்கள் - அரசாங்கத்தை வலியுறுத்துகிறது இலங்கை குடும்பத்திட்ட சங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, March 14, 2024

சனிட்டரி நப்கின்கள் உள்ளிட்ட மாதவிடாய்கால உபயோகப் பொருட்களுக்கான வரிகளை முற்றாக நீக்குங்கள் - அரசாங்கத்தை வலியுறுத்துகிறது இலங்கை குடும்பத்திட்ட சங்கம்

(நா.தனுஜா)

நாடளாவிய ரீதியிலுள்ள பெண்களின் உடல் மற்றும் உளவியல் சுகாதாரத்தில் 'மாதவிடாய் வறுமை' நிலை மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை குடும்பத்திட்ட சங்கம், சனிட்டரி நப்கின்கள் உள்ளடங்கலாக மாதவிடாய்கால உபயோகப் பொருட்கள் அனைத்துக்குமான வரிகளை முற்றாக நீக்க வேண்டுமென அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கை குடும்பத்திட்ட சங்கத்தினால் கடந்த வாரம் 'Axe the Period Tax' எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நிகழ்வொன்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியிலுள்ள பெண்களின் மாதவிடாய் கால சுகாதார நலனை உறுதிப்படுத்தும் வகையில் சனிட்டரி நப்கின்கள் உள்ளடங்கலாக மாதவிடாய் கால உபயோகப் பொருட்களுக்குரிய அனைத்து வரிகளையும் நீக்குவதற்கான கொள்கை மறுசீரமைப்பை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் வழங்குவதே இக்கலந்துரையாடலின் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.

சர்வதேச ரீதியில் 'Period Poverty' (மாதவிடாய் வறுமை) எனும் சொற்பதமானது பெண்கள் மாதவிடாய் காலத்தில் அவர்களுக்கு அவசியமான சுகாதாரமானதும், தரமானதுமான சனிட்டரி நப்கின்கள் உள்ளிட்ட பொருட்களை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதைக் குறிக்கின்றது.

இலங்கையைப் பொறுத்தமட்டில் நாட்டின் மொத்த சனத் தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இந்நிலைக்கு முகங்கொடுத்திருக்கின்ற போதிலும், கொள்கைசார் கலந்துரையாடல்களின்போது இவ்விடயம் பெரும்பாலும் கவனத்திற் கொள்ளப்படுவதில்லை என இலங்கை குடும்பத்திட்ட சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் 'மாதவிடாய் வறுமை' நிலை 50 சதவீதமாகக் காணப்படுவதுடன், நாடளாவிய ரீதியில் பெண்கள் உள்ளடங்கும் 50 சதவீதமான குடும்பங்களில் சனிட்டரி நப்கின்களைக் கொள்வனவு செய்வதற்காகப் பணம் செலவிடப்படுவதில்லை எனவும், அண்மைய பொருளாதார நெருக்கடியின் பின்னர் இவ்வீதம் மேலும் அதிகரித்திருக்கக் கூடும் எனவும் அச்சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையானது பெண்களின் உடல் மற்றும் உளவியல் சுகாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் மாத்திரமன்றி, சிறுமிகள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்த்தல், பாலின அடிப்படையிலான வன்முறைகள், சமூகத்திலிருந்து பெண்கள் தனிமைப்படுத்தப்படல் போன்ற சவால்களையும் தோற்றுவிப்பதாக குடும்பத்திட்ட சங்கம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று பெண்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகக் காணப்படும் சனிட்டரி நப்கின்கள் உள்ளிட்ட மாதவிடாய் கால உபயோகப் பொருட்களுக்கு வரி விதிப்பதானது, குறிப்பாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் உள்ளடங்கலாக பெருமளவானோருக்கு அதனைக் கொள்வனவு செய்ய முடியாத நிலையைத் தோற்றுவிப்பதாகவும், எனவே இந்நெருக்கடிக்குத் தீர்வுகாண வேண்டியது அவசியம் எனவும் இலங்கை குடும்பத்திட்ட சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதேவேளை இக்கலந்துரையாடலில் அட்வகாட்டா அமைப்பினால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட பெறுமதி சேர் வரி திருத்தத்தை அடுத்து, அதற்கு முன்னர் வரை வரிவிலக்களிக்கப்பட்டிருந்த சனிட்டரி நப்கின்கள் தற்போது வரி விதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

அதுமாத்திரமன்றி அவற்றுக்கான வரி விதிப்பு 51.07 சதவீதமாகும். இது பெண்களின் நலன் மீது தாக்கம் செலுத்தக்கூடிய மிக முக்கிய விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் புரிதலின்மை மற்றும் ஒருங்கிணைவு இன்மை என்பவற்றையே காண்பிப்பதாக குடும்பத்திட்ட சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு 140.6 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 10 சனிட்டரி நப்கின்களைக் கொண்ட பொதி, இப்போது 270 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், அதன்படி விலையில் 92 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்நிகழ்வில் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, சனிட்டரி நப்கின் உள்ளிட்ட மாதவிடாய் கால உபயோகப் பொருட்களுக்கான வரி அறவீட்டின் மூலம் வெறுமனே 0.0002 சதவீத வருமானமே திரட்டப்படுவதாகவும், எனவே அவற்றுக்கான வரிகளை முற்றாக நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அத்தோடு பாடசாலை மாணவிகளுக்கு சனிட்டரி நப்கின்களை இலவசமாக வழங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் யோசனை முன்வைத்தார்.

No comments:

Post a Comment