(நா.தனுஜா)
சொத்துக்களை அழித்தல் உள்ளடங்கலாக பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் சோதனை செய்வதற்கான செல்லுபடியாகும் உத்தரவுகளின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதன் விளைவாக சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள செயன்முறைகள் மீறப்படுவதுடன், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்கள் மீதான பொதுமக்களின் நம்பிக்கை தகர்க்கப்படுகின்றது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விசனம் வெளியிட்டுள்ளது.
அதுமாத்திரமன்றி பொலிஸார் அவர்களது செயற்பாடுகளுக்காகப் பொறுப்புக்கூறச் செய்யப்படாமையும், தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்பில் கருத்திற் கொள்ளப்படாமையும் எந்தவொரு நபரும் பாதுகாப்பாக உணரமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும் எனவும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.
போதைப் பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் கடந்த சில வாரங்களாக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் சோதனை நடவடிக்கைகளின்போது உரிய சட்ட செயன்முறைகள் பின்பற்றப்படவில்லை என மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கரிசனை வெளியிட்டுவரும் நிலையில், இது குறித்து சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது,
அண்மையில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழப்பதற்கும், கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைவதற்கும் வழிகோலிய வெலிகம துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். சட்டவிரோத போதைப் பொருள் நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினரை கைது செய்வதற்காகச் சென்ற வேளையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் உரிய செயன்முறையைப் பின்பற்றுதல் மற்றும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துதல் ஆகியவற்றின் மிகையான அவசியத்தை நாம் வலியுறுத்துகின்றோம்.
சொத்துக்களை அழித்தல் உள்ளடங்கலாக பொலிஸ் சோதனை நடவடிக்கைகள் சோதனை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவு மற்றும் செல்லுபடியாகும் உத்தரவுகளின்றி மேற்கொள்ளப்படுகின்றன. அதன் விளைவாக சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ள செயன்முறைகள் மீறப்படுகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகள் நீதியின் அடிப்படைக் கோட்பாடுகளை மழுங்கடிப்பது மாத்திரமன்றி, சட்டத்தை நடைமுறைப்படுத்தும் கட்டமைப்புக்களின் நேர்மைத்தன்மை தொடர்பில் பொதுமக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் தகர்க்கின்றது.
அரசியலமைப்பின் 13(4) ஆவது சரத்தின் பிரகாரம் நீதிமன்ற உத்தரவின்றி எந்தவொரு நபருக்கும் மரண தண்டனையோ அல்லது சிறைத் தண்டனையோ வழங்க முடியாது. குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட நபருக்குக்கூட சட்ட ரீதியான நடைமுறைகள் தவிர்ந்த ஏனைய தன்னிச்சையான வழிகளில் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தப்படுவதிலிருந்து பாதுகாப்புப் பெறும் உரிமை இருக்கின்றது.
சட்டவிரோத படுகொலைகளும், தன்னிச்சையான கைதுகளும் அதிகாரத்துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்கான அபரிமிதமான வாய்ப்பை அளிக்கின்றது. எனவே இவ்வாறான மிக மோசமான மீறல்கள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் நாம் அமைதியாக இருந்தால், எம்முடைய கூட்டுப்பாரம்பரியம் கேள்விக்குள்ளாக்கப்படும். பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும், குற்றம் சுமத்தப்பட்ட தரப்பினருக்கும் உரியவாறான நீதி நிலைநாட்டப்படக்கூடிய வகையில் சகல அதிகாரிகளும் முற்றுமுழுதாக சட்டத்துக்கு அமைய செயற்பட வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று சில சட்டத்தரணிகளை போதைப் பொருள் குற்றவாளிகளுடன் இணைந்து சதியில் ஈடுபடுபவர்கள் போன்று சித்தரிக்கும் வகையில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரினால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்தும் எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம்.
பொலிஸார் அவர்களது செயற்பாடுகளுக்காகப் பொறுப்புக்கூறச் செய்யப்படாமையும், தண்டனைகளிலிருந்து விடுபடும்போக்கு தொடர்பில் கருத்திற் கொள்ளப்படாமையும் எந்தவொரு நபரும் பாதுகாப்பாக உணரமுடியாத நிலையைத் தோற்றுவிக்கும்.
எனவே சட்ட நடைமுறைகளுடன் தொடர்புடைய சகல தரப்பினரும் பொறுப்புக்கூறச் செய்யப்படுவதையும், வெளிப்படைத் தன்மையுடன் செயற்படுவதையும், அனைத்து நபர்களினது உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் இவ்விவகாரங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறும், அவற்றுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறச் செய்யுமாறும், நீதிக் கட்டமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை மீளுறுதிப்படுத்துமாறும் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்துகின்றோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment