நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் - News View

About Us

About Us

Breaking

Saturday, January 6, 2024

நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

(இராஜதுரை ஹஷான்)

சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கு கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நேற்றுமுன்தினம் நபர்களை சுயமாக அடையாளப்படுத்தும் நவீன இயந்திரம் ஒன்று முதன் முறையாக பொருத்தப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, ஒரு குற்றச் செயல் இடம்பெற்று 24 மணி நேரத்துக்குள் குற்றச் செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கண்டுப்பிடித்து விடுகிறார்கள். ஆனால் அவர்கள் நாட்டை விட்டு விமான நிலையம் ஊடாகவும், கடல்மார்க்கமாகவும் செல்கிறார்கள்.

சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்ட தரப்பினர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுப்பதற்காகவே நபர்களை அடையாளப்படுத்தும் இயந்திரம் சர்வதேச விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ளது.

முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ள போதைப் பொருள் பாவனையை இல்லாதொழிக்க விசேட பொலிஸ் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன. ஒரு தரப்பினர் குற்றச்சாட்டுக்களை மாத்திரம் முன்வைக்கிறார்கள். போதைப் பொருள் வியாபாரிகளுக்கு ஆதரவாகவே ஒரு தரப்பினர் கருத்து தெரிவிக்கிறார்கள்.

போதைப் பொருள் பாவனை மற்றும் வியாபாரத்தை முழுமையாக இல்லாதொழிக்கும் செயற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. எக்காரணிகளுக்காகவும் தற்போதைய செயற்பாட்டை இடைநிறுத்தப் போவதில்லை.

சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நாட்டை விட்டு இனி வெளியேற முடியாது. அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.அதற்கு கடுமையான திட்டங்கள் செயற்படுத்தப்படும் என்றார்.

No comments:

Post a Comment