(எம்.ஆர்,எம், வசீம், இராஜதுரை ஹஷான்)
நாட்டின் கிரிக்கெட் விளையாட்டை பாதுகாப்பதற்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . சித்ரசிறி அறிக்கையை அடிப்படையாக வைத்து புதிய சட்டத்தை உருவாக்க முடியும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) இடம்பெற்ற ஊழல் மிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகார சபையின் தலைவர் உட்பட நிர்வாக சபை தலைவர் உட்பட நிர்வாக சபையை நீக்குதல் மற்றும் புதிய கட்டமைப்பைப்பொன்றை சட்டம் மூலம் அனுமதிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், இலங்கை கிரிக்கெட் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டில் பாரிய மக்கள் எதிர்ப்பு உருவாகியுள்ளது. அந்த வகையில் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த யோசனையை நிறைவேற்றுவது நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு கௌரவமளிப்பதாகவே அமையும். இந்த மக்கள் கருத்தை பிரபலப்படுத்துவது தவிர வேறு எந்த சட்டபூர்வ உரிமையும் எமக்கு கிடையாது.
அந்த வகையில் தேவையில்லாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்காமல் தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாக சபையை தயவுசெய்து பதவி விலகுமாறு நாம் கேட்டுக் கொள்கின்றோம்.
அத்துடன் கிரிக்கெட் சபையில் இடம்பெறுகின்ற செயற்பாடுகள் இனியும் இடம்பெறாமல் உரிய நடவடிக்கை எடுப்பதும் அவசியமாகும்.
சித்ரசிறி அறிக்கைக்கிணங்க, அதனை அடிப்படையாகக் கொண்டு நாம் அரசியலுக்கு அப்பால் சட்டமொன்றை தயாரித்துள்ளோம். அதில் அமைச்சருக்கு கூட அதிகாரம் கிடையாது. சிவில் சமூகத்திற்கே முழுமையான அதிகாரம் அதில் காணப்படுகிறது.
தற்போதைய ஜனாதிபதி குறுகிய அரசியலில் பயணிப்பவர் அல்ல. குறுகிய கால அரசியல் இலாபத்திற்காகவன்றி நீண்ட கால எதிர்பார்ப்பை கொண்ட முறைமையொன்றை அரசாங்கம் வகுத்துள்ளது.
தற்போதுள்ள கிரிக்கெட் நிர்வாக சபை ஊழல் நிறைந்தது. அவர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு சட்ட ரீதியான முறைமை தயாரிக்க வேண்டியது அவசியம்.
இருட்டில் கைகளை நுழைத்து இந்த பிரச்சினைக்கு பதில் தேட முடியாது. அவசரமாக எதையாவது செய்யப்போய் அதன் மூலம் 'சம்மி' க்களையே பலப்படுத்த நேரும். அதனை சரியாக சிந்தித்து, அதற்கான சட்டத்தை பலமானதாக உருவாக்க விளையாட்டுத்துறை சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment