இலங்கை நெய்னார் சமூக நல காப்பக ஏற்பாட்டில் செல்வன் எம்.எச். ரகீப் அல் ஹாதி எழுதிய 'விநோதக் கனவு' நூலின் அறிமுக விழா 11 ஆம் திகதி கொழும்பிலுள்ள வை.எம்.எம்.ஏ மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கலந்து சிறப்பித்தார்.
சிறப்பதிதிகளாக தமிழன் பத்திரிக்கை பிரதம ஆசிரியர் சிவராஜா ராமசாமி, விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் எம்.பி.எம். பைருஸ், கெப்பிட்டல் எப்.எம் பணிப்பாளர் ஸியா உல் ஹசன், முஸ்லிம் நிகழ்ச்சி உதவிப் பணிப்பாளர் பாத்திமா ரினூசியா மற்றும் பல ஊடகவியலாளர்கள் கவிஞர்கள் சமூக சேவகர்கள் என்று பலர் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் முதற் பிரதியை புரவலர் டாக்டர் எம்.ஏ.எம். முனீர் பெற்றுக் கொண்டார் .
நிகழ்ச்சி செல்வன் ஹுமைத் மெளசூகின் கிராத்துடன் ஆரம்பமானது. வரவேற்புரையினை கவிதாயினி சிமாரா அலியும், தலைமையுரையினை பன்னூலாசிரியர் அஷ்ரஃப் ஷிஹாப்தீனும் நிகழ்த்தினர்.
செல்வன் எம்.எச். ரஷீத் அல் ஹாமி 'வாசிப்பின் மகிமையை' அழகுற உரை நிகழ்த்த, நூல் உரைதனை ஆசிரியர் பாலஸ்ரீதரனும், கவிஞர் நாச்சியாதீவு பர்வீனும் வழங்கினர்.
நிகழ்ச்சியின் இடையில் செல்வன் யூசுப் சுஹைலின் இனிமையான பாடல் ஒன்று அரங்கேறியது.
அத்தோடு மனோ கணேசனின் உரை மிகச் சிறப்பாக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் சிறந்த வகையில் தன்னம்பிக்கை தரும்வகையில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்புரையில் நூலாசிரியர் தான் எவ்வாறு எழுத ஆரம்பித்தார் என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்தார்.
நன்றியுரையினை இளம் எழுத்தாளர் ரகீப் அல் ஹாதியின் தாயாரான எழுத்தாளர் ராஹிலா ஹலாம் வழங்கினார். நூல் அறிமுக நிகழ்வினை கெப்பிட்டல் எப்.எம். அறிவிப்பாளினி தொகுத்து வழங்கினார்.
இம்ரான் நெய்னார்
No comments:
Post a Comment