‘காஸா பகுதியின் மோதல் நிலைமைகளை ஒரு கோணத்திலும், ஐக்கிய நாடுகள் சபைக்குள் இலங்கையை வேறு கோணத்திலும் பார்ப்பதில் நியாயமில்லை என்றும், தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அடுத்த செப்டெம்பர் மாத ஐ.நா மனித உரிமை கூட்டத் தொடருக்கு தூய்மையான கரங்களுடன் வந்தால் மட்டுமே பதிலளிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். அவ்வாறு இல்லையெனில் இலங்கை அதற்கு பதிலளிக்க வேண்டுமா? என்றும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
வெலிமடை புதிய நீதிமன்ற கட்டிடத் தொகுதியை இன்று (03) திறந்துவைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித உரிமைகள் தொடர்பிலான உலகளாவிய பிரகடனத்தை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி உலக நாடுகள் அனைத்தும் அதற்கு இணங்கிச் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலுக்கு இலங்கை அரசாங்கம் கண்டனம் தெரிவித்திருந்தாகவும், பயங்கரவாதத்தை எதிர்க்கும் அதேநேரம், பலஸ்தீன அரச இறைமை தொடர்பிலான நியதிகளுக்கான ஒத்துழைப்பையும் இலங்கை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.
சர்வதேச சமூகத்தின் இந்த கண்டனமானது சர்வதேச சட்டங்கள் மற்றும் ஒழுங்கு முறைகளின் கட்டமைப்பிற்குள் பதிலடி கொடுக்கும் உரிமையை இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், அத்தகைய நியதிகள் உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இல்லாதிருக்கின்றமைக்கு கவலை தெரிவித்த ஜனாதிபதி, ஐ.நா. முகவர் நிறுவனங்களுக்கமைய காஸாவில் 10,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டமை குறித்து சர்வதேச சமூகத்திடமிருந்து கிடைக்கும் பதில்கள் என்னவென்ற கேள்விக்குறியை தோற்றுவித்துள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் இலங்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இலங்கை மற்றும் காஸா பகுதி தொடர்பில் இந்த நாடுகள் கடைப்பிடிக்கும் அணுகுமுறையில் எதற்காக வேறுபாடு காட்டப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். எவ்வாறாயினும் இரு தரப்பினருக்கும் ஒரே மாதிரியான சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
சர்வதேச சட்டத்தின்படி பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக எடுக்கப்படும் அடிப்படை சுதந்திரத்தைப் பாதுகாப்பதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திட்டங்களுக்கு அமைவானதாக காணப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அவற்றை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படக்கூடிய முரண்பாடுகள் தொடர்பிலும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
அதேபோல் காஸா எல்லையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் மீதான பாதிப்பு தொடர்பில் கவலை தெரிவித்த ஜனாதிபதி, உணவு பாதுகாப்பின்மை, எரிபொருள் இன்மை, அத்தியாவசிய மருந்து பொருட்கள் இன்மை, உள்ளக வருமானம் குறைவடைதல் என்பன இலங்கை கடந்த வருடத்தில் முகம்கொடுத்த நெருக்கடியை விடவும் பாரதூரமானது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேற்குலக நாடுகள் இலங்கை மற்றும் காஸா எல்லை தொடர்பில் பின்பற்றும் நியதிகளின் வேறுபாடுகள் தொடர்பில் கேள்வி எழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தூய்மையான கரங்களுடன் உலகளாவிய தேவைகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
வெலிமடை மக்களின் நீதிமன்றச் செயற்பாடுகளை இலகுபடுத்தும் வகையில் மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்றம், அலுவலக வசதிகள் உட்பட பொது வசதிகளை உள்ளடக்கியதாக மேற்படி 03 மாடிக் கட்டிடத்தொகுதி 460 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இந்த நீதிமன்ற கட்டிடத்தொகுதியை நிர்மாணித்துள்ளமையினால் குறைந்தபட்ச வசதிகளை கொண்டிருந்த வெலிமடை நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம், நீதிவான் நீதிமன்ற நடவடிக்கைளுடன் கூடியதாக மாறியுள்ளது.
சர்வமத வழிபாடுகளை தொடர்ந்து, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் படிகத்தை திரைநீக்கம் செய்து நீதிமன்ற கட்டித் தொகுதியை திறந்து வைத்தார்.
இதன்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வெலிமட சட்டத்தரணிகள் சங்கத்தினால் நினைவுச் சின்னமொன்று வழங்கி வரவேற்பளிக்கப்பட்டது.
இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, தேனுக விதானகமகே, சாமர சம்பத் தசநாயக்க, அரவிந்த குமார், பாராளுமன்ற உறுப்பினர் சுதர்ஷன தேனிபிட்டிய, ஊவா மாகாண ஆளுநர் ஜே.எம்.எல்.முஸம்மில், சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய, உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மாவட்ட நீதிமன்ற நீதிவான்கள், நீதிவான் நீதிமன்ற, நீதிவான்கள், வெலிமட சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் கலானி பீ. பத்திரன உள்ளிட்ட சட்டத்தரணிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment