(நா.தனுஜா)
அரசாங்கம் மற்றும் அரச கட்டமைப்புக்களிடமிருந்து நம்பகத்தன்மை வாய்ந்த உண்மையான தகவல்கள் வெளிவராதபோது போலியானதும், தவறானதுமான தகவல்கள் உருவாவதாக சுட்டிக்காட்டியுள்ள பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரும், கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் என்.செல்வகுமாரன், உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்படாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தெற்காசிய சிந்தனைக் குழாம்களின் ஒன்றியத்துடன் இணைந்து தேசிய சமாதானப் பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சர்வதேச தொடர்புகளில் போலிச் செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை' (Fake News, Dis-Information and Propaganda in International Relations) எனும் புத்தக வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) கொழும்பிலுள்ள ரேணுகா ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் 'சர்வதேச தொடர்புகளில் போலிச் செய்தி, தவறான தகவல் மற்றும் பரப்புரை குறித்த இலங்கையின் அனுபவங்கள்' என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குழு ரீதியான கலந்துரையாடலில் பங்கேற்று, உரையாற்றுகையிலேயே பேராசிரியர் செல்வகுமாரன் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, பொதுமக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ள அரசாங்கத்திடமிருந்து நம்பகத்தன்மை வாய்ந்த தகவல்கள் வெளிவராதபோது போலிச் செய்திகளும், தவறான தகவல்களும் உருவாகின்றன. பொது வெளியில் பகிரப்படும் தவறான தகவல்கள் மக்களால் நம்பப்படுகின்றன.
குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 'சனல்-4' செய்திச் சேவையினால் அண்மையில் வெளியிடப்பட்ட ஆவணப்படம் சர்ச்சைக்குரிய பேசு பொருளாக மாறியிருக்கின்றது. ஆனால் அத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் பொதுமக்கள் பார்வையிடக்கூடிய வகையில் பகிரங்கப்படுத்தப்படவில்லை. அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருக்கிறது.
அதேபோன்று மேற்குறிப்பிட்ட ஆவணப்படம் வெளியானதன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மீண்டுமொரு ஆணைக்குழு நியமிக்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறெனில் முன்னைய ஆணைக்குழுக்கள் மற்றும் அவற்றினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மீது ஜனாதிபதி நம்பிக்கை இழந்திருக்கின்றாரா? என்ற கேள்வி எழுகிறது.
இவையனைத்தும் ஆட்சியியல் சார் நெருக்கடிகளையே காண்பிக்கின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பதாகவே நாட்டின் அரச சேவை அரசியல் மயப்படுத்தப்பட்டதாக மாறியிருக்கின்றது. அரச சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் 'அரச' ஊழியர்களாகவன்றி, 'அரசாங்க' ஊழியர்களாக மாறியிருக்கின்றார்கள்.
குறிப்பாக 2019 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறியவுடன் உயிர்த்த ஞாயிறு தினப் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அதிகாரிகள் மாற்றப்பட்டதாக வெளியான செய்திகளை அதற்கு உதாரணமாகக் கூற முடியும்.
இவ்வாறானதொரு பின்னணியில் தற்போது அரச சேவையின் முதுகெலும்பை நிமிர்த்துவது என்பது மிகக்கடினமானதாக இருப்பதாக நான் உணர்கிறேன்.
பெரும்பாலான அரச ஊழியர்கள் திறமை அடிப்படையிலான நேர்மையான பதவி உயர்வைப் பெறுவதில்லை என்பதால், அவர்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். அதனால் அவர்களால் வெளியிடப்படும் தகவல்களை மக்கள் நம்புவதில்லை. எனவே முதலில் அரச கட்டமைப்புக்கள் மற்றும் அரச சேவையின் சுயாதீனத்தன்மையையும், நம்பகத்தன்மையையும் உறுதிப்படுத்த வேண்டும்.
அடுத்ததாக அனைவருக்கும் பாதுகாப்பான இணையவெளியை உறுதிப்படுத்துவது அவசியம். இருப்பினும் அதனை முன்னிறுத்தி தற்போது அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலைக்காப்புச் சட்டமூலத்தின் சில உள்ளடக்கங்களை ஏற்றுக் கொள்ள முடியாது.
அதேபோன்று அச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தவறான முறையில் பயன்படுத்தப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டியதும் இன்றியமையாததாகும் என்று வலியுறுத்தினார்.
No comments:
Post a Comment