(எம்.ஆர்.எம்.வசீம்)
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். தேர்தலை பிற்போடும் எண்ணம் ஜனாதிபதிக்கு இல்லை. அத்துடன் தம்மிக்க பெரேரா ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவது அவரது உரிமை. என்றாலும் அது ஒருபாேதும் ரணில் விக்ரமசிங்கவுக்கு சவாலாக அமையப்போவதில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் விஜயமான்ன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். அவ்வாறான எந்த எண்ணமும் அரசாங்கத்துக்கோ ஜனாதிபதிக்கோ இல்லை. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் அடுத்த வருடமே இடம்பெற இருக்கிறது. அதனால் உரிய காலத்தில் தேர்தல் இடம்பெறும்.
அத்துடன் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி எவ்வாறு தயாராகப்போகிறது. அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பாக கடைசியாக இடம்பெற்ற கட்சியின் செயற்குழுவின்போது நாங்கள் அது தொடர்பாக கலந்துரையாடி இருந்தாோம். அதனால் எதிர்க்கட்சிகள் தங்களின் பிரசாரத்துக்காக, எந்த அடிப்படையும் இல்லாத விடயங்களை தெரிவித்து மக்களை குழப்பி வருகின்றனர்.
அத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் திடடமிட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான எந்த யோசனையும் தெரிவிக்கப்படவில்லை. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இருக்கின்றபடியாலே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு நாட்டை கட்டியெழுப்புவதற்கான தீர்மானங்களை விரைவாக முன்னெடுக்க முடியுமாகி இருக்கிறது.
அதனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்போதைக்கு இல்லாமலாக்க எந்த திட்டமும் இல்லை. ஆனால் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாகும். அதனால் எதிர்காலத்தில் அனைவருடனும் கலந்துரையாடி இது தொடர்பாக தீர்மானம் மேற்கொள்ளலாம்.
மேலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப்போவதாக தம்மிக்க பெரேரா தெரிவித்திருக்கிறார். அது அவருடைய உரிமை. அவரைப்போன்று ஜனாதிபதியாக கனவு காண்பவர்கள் பலரும் இருக்கின்றனர்.
என்றாலும் வங்குராேத்து அடைந்திருந்த நாட்டை மீட்பதற்கு யாரும் முன்வராத நிலையில் இந்த நாட்டை மீண்டும் ஸ்திரமான நிலைக்கு கொண்டுவர யார் நடவடிக்கை எடுத்தார் என்பது மக்களுக்கு தெரியும். அதனால் தமிக்க பெரேராவோ அல்லது வேறு யாராக இருந்தாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர்கள் யாரும் சவாலாகப்போவதில்லை என்றார்.
No comments:
Post a Comment