(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் மீண்டும் எம்முடன் இணையலாம், காலவகாசம் வழங்கப்படும். நாட்டுக்காகவே மாறுபட்ட அரசியல் கொள்கையை கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் ஒன்றிணைந்துள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பொதுஜன பெரமுனவின் தலைமைக் காரியாலயத்தில் செவ்வாய்க்கிழமை பஷில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கட்சி என்ற ரீதியில் பலமாக செயற்படுகிறோம். அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களுக்கு தயாராகவே உள்ளோம்.
அதற்கான நடவடிக்கைகளை தற்போது முன்னெடுத்துள்ளோம். தேசிய தேர்தல்களில் கட்சியின் கொள்கையை முன்னிலைப்படுத்தி செயற்படுவோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கொள்கைக்கு எதிராக 45 வருட காலம் அரசியல் செய்த ரணில் விக்கிரமசிங்கவை நாட்டுக்காக ஜனாதிபதியாக்கி அவருடன் ஒன்றிணைந்து செயற்படுகிறோம்.
எதிராக செயற்பட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எம்முடன் இணைய முடியுமாயின் மஹிந்த ராஜபக்ஷவுடன் ஒன்றிணைந்து செயற்பட்டவர்கள் பல்வேறு காரணிகளால் பிரிந்து சென்றவர்கள் தாராளமாக ஒன்றிணையலாம்.
பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர் மீண்டும் எம்முடன் ஒன்றிணையலாம். அதற்கு காலவகாசம் வழங்கப்படும். சகல தரப்பினரும் இணைந்து செயற்பட வேண்டிய தருணம் தோற்றம் பெற்றுள்ளது.
எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின் கட்டணம் ஒவ்வொரு மாதமும் அதிகரிப்பதால் பொதுமக்கள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள்.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment